சிம்புவை மிரட்டிய ரவிக்குமார்... அதன் பின் நடந்தது தெரியுமா?
சென்னை: இயக்குநர் KS ரவிக்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தெலுங்கு படமான ரூலர். தற்சமயம் படங்களை தயாரிப்பதிலும், நடிப்பதிலும் பிசியாக இருக்கிறார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் ஜெய்லர் படத்தின் திரைக்கதை பணிகளிலும் கே.எஸ். ரவிக்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.
அதைத் தவிர்த்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். ராகவா லாரன்ஸ் அதில் கதாநாயகனாக நடிக்கப் போகிறார். இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் அவர் பணிபுரிந்த விதம் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சரவணா
ரஜினி, கமல், அஜித் என்ற மூன்று நடிகர்களை வைத்து மீண்டும் மீண்டும் படங்களை இயக்கிக் கொன்டிருந்த ரவிக்குமாரை சிம்பு படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்தனர். தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெற்றி பெற்ற பத்ரா திரைப்படத்தை தமிழில் சரவணா என்கிற பெயரில் ரீமேக் செய்தனர். மன்மதன் படத்தை தொடர்ந்து சிம்பு ஜோதிகா கூட்டணி மீண்டும் ஜோடியாக நடித்தனர்.

கடுப்பேற்றிய சிம்பு
வழக்கமாக நடிகர்கள் முதல், தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரையும் ரஃபாக ஹேண்டில் செய்வார் ரவிக்குமார். அதனால்தான் சொன்ன தேதியில் படத்தை முடித்து கொடுக்கும் நல்ல பெயரை தயாரிப்பாளர்கள் மத்தியில் பெற்றுள்ளார். அவருடைய படப்பிடிப்பிற்கே தினமும் தாமதமாக சென்றுள்ளார் சிம்பு. இரண்டு நாட்கள் பொறுத்துக் கொண்ட ரவிக்குமார், மூன்றாவது நாள் சிம்புவை அழைத்து, நான் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன். நீ வேறு இயக்குநரை வைத்து படத்தை எடுத்துக் கொள் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதிர்ச்சியான சிம்பு
ஒரு பெரிய இயக்குநர் படத்தை விட்டு விலகினால், அது தனக்கு கெட்ட பேர் ஆகிவிடும் என்று உணர்ந்த சிம்பு அதிர்ச்சியாகி சமாதானம் பேசினாராம். அதற்கு, உன் படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக அஜித்தின் வரலாறு படத்தை இயக்க வேண்டும். நீ கண்ட நேரத்துக்கு படப்பிடிப்பிற்கு வந்தால் சொன்ன தேதியில் எப்படி என்னால் படம் பண்ண முடியும் என்று கேட்டுள்ளார்.

வழிக்கு வந்த சிம்பு
ரவிக்குமாரை சமாதானப்படுத்துவதற்காக இனிமேல் சரியாக வருகிறேன் என்று சிம்பு கூறினாராம். அதற்கு, நீ வர வேண்டிய நேரத்தில் வா. அது பிரச்சனை இல்லை. ஆனால் என்னிடம் முன் கூட்டியே சொல்லிவிடு. 9 என்றால் 9 மணி, 11 என்றால் 11 மணி. வரவில்லை என்றால் அதையும் சொல்லிவிடு. நான் அதைப் பொருத்து வேறு காட்சி எடுத்துக் கொள்கிறேன் என்று கூற, சிம்பு அதற்கு ஒப்புக் கொண்டாராம். அதே வேளையில் இரவு நேர ஷூட்டிங் என்றால், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடித்துக் கொடுப்பார் என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











