சந்திரமுகி பாம்பிற்கு என்னதான் ஆச்சு... ரகசியம் உடைத்த பி.வாசு
சென்னை: கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினி, ஜோதிகா, வடிவேலு, பிரபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் சக்கை போடு போட்ட திரைப்படம் சந்திரமுகி.
பாபா திரைப்படத்தின் படுதோல்விக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தில் சொல்லி அடித்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பெரிய நீளமான பாம்பை பற்றிய சுவாரசியமான தகவலை பி. வாசு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சந்திரமுகி
படையப்பா என்கிற இண்டஸ்ட்ரி ஹிட் படத்தைக் கொடுத்துவிட்டு சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டு ரஜினிகாந்த் நடித்த படம் தான் பாபா. படையப்பா திரைப்படம் மூலம் உருவாகியிருந்த எதிர்பார்ப்பை பாபா சுக்கு நூறாக உடைத்தது. அதன் பின்னர் மீண்டும் இடைவெளி எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த் பல கதைகளைக் கேட்டு இறுதியில் முடிவு செய்ததுதான் சந்திரமுகி.

யானை அல்ல குதிரை
படையப்பா என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அப்போது கூறிய ஜக்குபாய் திரைப்படத்தையே வேண்டாம் என்று தள்ளி வைத்துவிட்டு 90-களில் தனக்கு வெற்றிப் படங்களை கொடுத்த பீ.வாசு ஏற்கனவே கன்னடத்தில் எடுத்திருந்த ஆப்தமித்ரா படத்தை தேர்வு செய்து தமிழில் சந்திரமுகியாக எடுத்தார். அந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது,"நான் கீழே விழுந்தால் எழுந்திருக்க சிரமப்படும் யானை அல்ல உடனே துள்ளி எழுந்து ஓடும் குதிரை" என்று படத்தின் வெற்றியை சொல்லி அடித்தார்.

பாம்பு
பிற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் என்ற ஒன்று பிரபலமானபோது, பல படங்களில் இருக்கும் தேவையில்லாத கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் என்று வரிசைப்படுத்தி சில படங்களை கூறி வந்தனர். அந்த வரிசையில் சந்திரமுகி பாம்பும் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக ஒரு படத்தில் யாரேனும் நடிகர் தேவையில்லாமல் நடித்திருந்தால் அவரும் சந்திரமுகி பாம்பும் ஒன்றுதான். அவருக்கு அந்தப் படத்தில் வேலையே இல்லை என்று மீம்ஸ் வெளியிடுவார்கள். அந்த அளவிற்கு அந்தப் பாம்பு பிரபலமானது.

பாம்பு என்னதான் ஆனது
இந்நிலையில் லைக்கா நிறுவனத்தில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் பீ.வாசு சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் அந்தப் பாம்பை பற்றி கூறியுள்ளார். ஒவ்வொரு முறை ஜோதிகா சந்திரமுகி அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுதான் ஆடுவாள். பிறகு வெளியே வந்ததும் அதனை சாத்தி விட்டு வந்துவிடுவாள். ஆனால் நன்கு கவனித்தீர்கள் என்றால் ரா ரா பாடலில் ரஜினிகாந்த் பாடிக் கொண்டே ஜோதிகாவை வெளியே அழைத்து வருவார். ஜோதிகாவும் மெய்மறந்து அப்படியே வந்துவிடுவார். அந்த கதவு சாத்தப்படாததை யாரும் கவனிக்கவே இல்லை. அதுவரை பாதுகாக்கப்பட்ட சந்திரமுகியின் பொக்கிஷம் அருகில் இருந்த பாம்பு, சந்திரமுகி சாந்தமடைந்ததால் வீட்டைவிட்டு வெளியே போயிருக்கும். அந்த பாம்பு எங்கிருந்து வந்தது, ஏன் போனது என்பதை பற்றி இரண்டாம் பாகத்தில் நான் கூறுகிறேன் என்று பீ.வாசு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











