twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை -8: எம்.ஜி.ஆருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிரச்சினை வந்ததேன்?

    |

    -பெரு துளசிபழனிவேல்

    ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் பன்முகம் கொண்ட கலைஞர், கதை வசனகர்த்தா, பத்திரிகையாளர், ஸ்டுடியோ அதிபர், தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர்.

    இவரது திரையுலக வாழ்க்கை 1941ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. முதல் படமாக ‘மதன காமராஜன்' படத்தைத் தயாரித்தார். தொடர்ந்து ‘நந்தனார்', ‘ஒளவையார்', ‘மிஸ் மாலினி', ‘சம்சாரம்', ‘மங்கம்மா சபதம்', ‘அபூர்வ சகோதரர்கள்', ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்', ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை', ‘இரும்புத்திரை' போன்ற படங்களை கருப்பு வெள்ளையில் தயாரித்தார்.

    Why conflicts between MGR and his Producers?

    இவரால் அதிகபொருட்செலவில் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட ‘சந்திரலேகா' படம்தான் இவருக்கு நலல பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமல்ல இயக்குனரும் இவரே.

    இந்தச் சூழ்நிலையில்தான் திரைப்படத் துறையில் சிலமாற்றங்கள் ஏற்பட்டன. கருப்பு வெள்ளை படம் எடுத்தவர்களெல்லாம் கலரில் படத்தை எடுக்கத் தொடங்கினார்கள். அப்படி எடுப்பதை பெருமையாகக் கருதினார்கள்.
    எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கும் கலரில் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

    அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்.அவர்கள் தன்னை வைத்து கருப்பு வெள்ளைப் படங்களை தயாரித்தவர்களுக்கெல்லாம் கலரில் எடுப்பதற்கு, தானே முன்வந்து கால்ஷீட் கொடுத்து உதவினார். ஜி.என்.வேவலு மணியின் சரவணா பிலிம்ஸ் நிறுவனத்தை ‘படகோட்டி' படத்தை கலரில் எடுக்க வைத்தார். தன்னை வைத்து அதற்கு முன் எந்தப் படமும் எடுக்காத ஏவிஎம் நிறுவனத்திற்கும் கால்ஷீட் கொடுத்து அழகான கலரில் ‘அன்பே வா' படத்தைத் தயாரிக்க வைத்தார்.

    விஜய வாஹினி நிறுவன பேனரில் ‘எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் நடித்தார்.கருப்பு வெள்ளையில் எம்.ஜி.ஆர். அவர்களை நாயகனாக வைத்து அதிகம் படங்களை தயாரித்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அவருடைய தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் கால்ஷீட் கொடுத்து, ‘நல்ல நேரம்' படத்தை கலரில் எடுக்க வைத்தார்.

    எம்.ஜி.ஆர்.அவர்கள் முதன்முதலில் நடிகராக அறிமுகமான ‘சதிலீலாவதி' படத்திற்கு கதைவசனம் எழுதிய எஸ்.எஸ்.வாசன். இப்பொழுது எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து கலரில் படம் எடுக்க ஏற்பாடுகள் செய்தார் அதற்கான கதைகள் தேடப்பட்டன. இறுதியில் இந்தியில் வெளிவந்த தர்மேந்திரா, மும்தாஜ், மீனாகுமாரி நடித்த ‘பூல் அவுர் பத்தார்' என்ற படத்தைத் தேர்வு செய்தார்கள்.

    எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் படத்தைப் போட்டு காண்பித்தார்கள் திருடன், குடிகாரன், எல்லோரும் பயப்படுகின்ற அளவிற்கு முரடன், அவன் வாழ்கின்ற பகுதியில் யாருக்கும் அவனிடம் பழக்கமில்லை. அவனைப் பார்த்ததும் அனைவரும் பயந்து ஓடினார்கள். போலீசும் திருடன் என்பதால் அவனைத் துரத்திக் கொண்டே இருந்தது. திருடப்போன இடத்தில் ஒரு விதவைப் பெண்ணைப் பார்க்கிறான், வீட்டிற்கு அழைத்து வருகிறான். அவளை இறுதியில் திருமணம் செய்துக் கொள்கிறான். இடையில் திருட்டுக் கும்பலில் இருக்கும் ஒரு பெண் அவனைக் காதலிக்கிறாள்.

    Why conflicts between MGR and his Producers?

    இப்படி போகிறது இந்தப்படத்தின் கதை.

    படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். தமிழுக்கு ஏற்ற சில மாற்றங்களும், தன் படத்திற்கே உரித்தான சில கருத்துக்களையும் சொன்னார்.

    சிறுவனாக இருக்கும்போது பசிக்காக திருடப் போனவன் திருடனாகி விட்டான். அதன்மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தான். சில சுயநல கூட்டத்தினர் அவனை தங்களது தேவைகளுக்காக தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் அவனை உண்மையில் காதலித்துக் கொண்டிருந்தாள். திருடப்போன இடத்தில் ஆபத்தில் இருந்த ஒரு விதவைப் பெண்ணை காப்பாற்றி அழைத்து வருகிறான். அவளை சகோதரியாக நினைக்கிறான். அவளும் அவனைத் திருத்த முயற்சிக்கிறாள். அந்த ஊரில் திடீரென்று நடக்கும் தீவிபத்திலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றுகிறான். அப்பொழுது தீவிபத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடுகிறான். ஊரேஅவனைப் புரிந்துக் கொண்டு காப்பாற்ற முயற்சி செய்கிறது. கடவுளிடம் பிரார்த்தனை செய்து பாடல்களையும் பாடுகிறார்கள். இப்படி எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கின்றவகையில் சிலமாற்றங்கள் செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

    அதன்படி படத்தின் திரைக்கதை வசனகர்த்தா கே.சொர்ணம் அதற்கான வேலைகளில் இறங்கினார். ஆரம்பத்தில் மாற்றங்களுக்கு தயாரிப்பாளர் தரப்பில் ஒத்துக் கொண்டதால் படப்பிடிப்பு ஆரம்பமாகியது.ப டத்திற்கு ‘ஒளிவிளக்கு' என்று பெயர் வைத்தார்கள்.எம்.ஜி.ஆர்.அவர்களும் ‘ஒளிவிளக்கு' படத்தை தான் நடிக்கும் படங்களின் பட்டியலில் 100வது படமாக அறிவித்தார்.

    ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்.சொன்ன மாற்றங்களை ஏற்றுக் கொணடவர்கள் பின்னாளில் கதைப்படி படத்தை முடிப்போம் என்று முரண்டு பிடித்தார்கள். அதனால் தொடர்ந்து நடந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நின்றது. பிறகு இரு தரப்பினரும் கலந்துப் பேசியதால் சமரசம் ஆகி படப்பிடிப்பும் தொடர்ந்தது.

    Why conflicts between MGR and his Producers?

    எம்.ஜி.ஆர். இதில் குடிகாரனாக நடித்திருப்பதால், அதை மறுத்து குடிப்பது தவறு என்பதை அவரே பல வித தோற்றத்தில் வந்து பாடி நடித்து விளக்குகின்ற வகையில்,

    "தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?
    இல்லை...நீதான் ஒரு மிருகம்
    இந்த மதுவில் விழும் நேரம்
    மனமும் நல்ல குணமும்
    உன் நினைவை விட்டு அகலும்..."

    என்ற ஒரு பாடல்காட்சியைப் படமாக்கிச் சேர்த்தார்கள்.

    அதே போல் கதைப்படி எம்.ஜி.ஆர்.தீவிபத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்காக போராடுகின்ற போது,
    ‘இறைவா உன் மாளிகையில்
    எத்தனையோ மணி விளக்கு
    தலைவா உன் காலடியில்
    என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு...

    உள்ளமதில் உள்ளவரை
    அள்ளி தரும் நல்லவரை
    விண்ணுலகம் வா என்றால்
    மண்ணுலகம் என்னாகும்.."

    என்றுஊர்மக்கள்ஒன்று கூடிப் பிராத்தனை செய்து பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சியையும் படமாக்கிச் சேர்த்தார்கள்.

    இந்தப் பாடல் காட்சிகள் கதைப்படி, எம்.ஜி.ஆர்.விருப்பப்படி படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டவை. படத்திற்காக கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட இந்தப் பிராத்தனைப் பாடல்தான் எம்.ஜி.ஆர்.அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது நலம்பெற்று வரவேண்டுமென்று உண்மையிலேயே உலகம் முழுவதும் மக்களால் பாடப்பட்டது. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க பாடல் இது.

    இந்தப் பாடல் காட்சி ஒளிப்பரப்பாகும் போது எல்லா தியேட்டர்களிலும் உண்மையிலேயே கையிலே கற்பூரம் ஏற்றிக் வைத்துக் கொண்டு ரசிர்கள் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள், அவற்றின் தயாரிப்பாளர்களோடு முரண்பாடு ஏற்பட்டு இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கிடையில்தான் தயாராகி வெளிவந்திருக்கின்றன. இதற்கு காரணம் அவரை வைத்து படம் எடுக்க வருகிறவர்களில் பலர் கதைப்படி படத்தை எடுக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் எம்.ஜி.ஆரோ கதைப்படி என்பதை விட கருத்துப்படி என்பதற்குதான் முக்கியத்துவம் தருவார்.

    தனது படத்தைப் பார்க்க வருகிறவர்களுக்கு நல்ல கருத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க வேண்டுமென்பதில் அதிக கவனம் எடுத்து கொள்வார். எதிர்மறைச் சிந்தனையை யாரிடமும் தன் படம் உருவாக்கிவிடக் கூடாது என்பதில்தான் அதிக அக்கறை அவருக்கு. அனைவருக்கும் பிடிக்கின்ற வகையில் ஜனரஞ்சகமாகவும் எடுக்க வேண்டுமென்று விரும்புவார்.

    இதில் முரண்பாடு வரும்போதுதான் பிரச்சனை ஏற்பட்டு விடும். படம் வெளிவந்ததும் அது அள்ளித்தரும் வசூலைப் பார்த்ததும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். அதே தயாரிப்பாளர் அடுத்த படத்துக்கு கால்ஷீட் கேட்டு ராமாவரம் தோட்டத்தில் வந்து நிற்பார்!

    -தொடரும்...

    English summary
    The 8th episode of Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai discusses on late legend MGR's Oli Vilakku.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X