வரம் கொடுப்பாரா 'சாமி'?
| Click here for more images |
ஒரு எய்ட்ஸ் நோயாளி இந்த சமூகத்தில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறான் என்பதை கிட்டத்தட்ட பருத்திவீரன் ஸ்டைலில் மிருகம் படத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் சாமி.
இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது தான் நடிகை பத்மப்ரியாவுக்கும் இயக்குனருக்கும் இடையே மோதல் மூண்டது.
தன்னை சாமி அறைந்துவிட்டதாகவும், பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் பத்மா பகீர் குற்றம் சாட்டினார். இதையடுத்து இயக்குனருக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்தப் பரபரப்புகள் ஓய்ந்துவிட்ட நிலையில் மிருகம் படத்தின் பாடல்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. சிறப்பு விருந்தினராக சி.பி.ஐ. முன்னால் இயக்குநர் கார்த்திகேயன் பங்கேற்று, பாடல்களை வெளியிட்டார்.
இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்தால் நிறைய வன்முறைக் காட்சிகள் தெரிகிறது. ஆனால் இயக்குநர் சாமி சொன்ன கதையை வைத்துப் பார்க்கும் போது, இந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக மிருகம் படம் அமையும் என்றார் கார்த்திகேயன்.
இவர் மட்டுமல்ல, படம் பார்த்த கோலிவுட் பிரமுகர்கள் பலரும், படம் பற்றி பெரிதாகச் சொல்கிறார்கள்.
இந்த தகவல் தெலுங்கு நடிகர் மோகன்பாபு காதுக்கும் போயிருக்கிறது. உடனடியாக தனது மகனை அனுப்பி இயக்குனரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். முதலில் படம் தமிழில் ரிலீஸாகட்டும் அப்புறம் பேசிக்கலாம் என்று அன்பாக மறுத்து விட்டாராம் இயக்குனர் சாமி.
மிருகம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, இப்போது டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், படத்தின் நாயகி பத்மப்பிரியாவை டப்பிங் பேச இதுவரை இயக்கநர் அழைக்கவில்லையாம்.
இதற்கிடையே டப்பிங்கில் படத்தைப் பார்த்த ஆட்கள் படம் நல்லபடியாக, பெரிய அளவில் வந்திருப்பதாகச் சொன்ன தகவல் பத்மபிரியாவின் காதுக்கும் போயிருக்கிறதாம்.
படம் தேசிய விருதுக்குப் போகும் அளவுக்கு தரமாக வந்துள்ள நிலையில், பத்மப்ரியாவே டப்பிங் பேசினால்தான் அவருக்கும் விருது கிடைக்கும். (மற்றவர்கள் டப்பிங் பேசினால் விருது கிடைக்காது)
இதையடுத்து தன்னையே டப்பிங் பேச அழைக்குமாறு தயாரிப்பாளரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறாராம் பத்மபிரியா.
ஆனால் இயக்குனர் சாமி அதற்கு ஒத்துக் கொள்வார் என்று தெரியவில்லை.
'சாமி' வரம் கொடுப்பாரா?


Click it and Unblock the Notifications











