பொன்னியின் செல்வன் கோலிவுட்டின் பான் இந்திய படமாக மாறுமா? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: இயக்குநர் ராஜமெளலி பாகுபலி, RRR என பான் இந்திய படங்களை கொடுத்து பாலிவுட்டை மட்டுமல்ல கோலிவுட்டையும் பெரும் பிரச்சனைக்குள் ஆழ்த்தி விட்டார்.
அவர் ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் இயக்குநர் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 2 படத்தின் மூலம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நிகழ்த்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் பான் இந்தியா பைத்தியம் பிடிக்க வைத்துள்ளார்.
ரஜினிகாந்தின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்கள் பெரிய வெற்றியை விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் பெறாத நிலையில், ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளும் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மீது தான் உள்ளன.

2.0
பான் இந்திய படங்களுக்கு முன்னோடியே இயக்குநர் ஷங்கர் என்று தான் சொல்ல வேண்டும். 2.0 படத்திலேயே பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை வில்லனாக போட்டு படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கினார். ஆனால், அந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்களை குவித்து படத்தை பெரிதளவில் ஓடவிடாமல் செய்து விட்டனர். இந்தியன், முதல்வன், சிவாஜி, எந்திரன் படங்கள் எல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த படங்களாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

கடுப்பான ஷங்கர்
2.0 படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாத நிலையில், இந்திய சினிமாவையே பெருமைப்படுத்தும் விதமாக மீண்டும் கமல் உடன் இணைந்து இந்தியன் 2 படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வந்தார் ஷங்கர். ஆனால், எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்து காரணமாக மூவர் பலியான நிலையில், அந்த படம் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால், கடுப்பான ஷங்கர் அடுத்ததாக ராம்சரண் படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 இந்நேரம் வெளியாகி இருந்தால், ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்களுக்கு நல்ல போட்டியாக அந்த படம் அமைந்திருக்கும் என கூறுகின்றனர்.

ராஜமெளலி போட்ட ரோடு
ஷங்கர் பாதையை புரிந்து கொண்ட இயக்குநர் ராஜமெளலி பாகுபலி படங்கள் மூலம் மிகப்பெரிய பான் இந்தியா பாதையை அமைத்து விட்டார். பாலிவுட் நடிகை ஆலியா பட், அஜய் தேவ்கனை எல்லாம் நடிக்க வைத்து RRR படத்தையும் அதே ரோட்டில் வெற்றி நடை போட வைத்து 1000 கோடிகளை சம்பாதித்து மிகப்பெரிய பான் இந்தியா ஸ்டாம்ப்பை பதித்துள்ளார்.

பின்னி பெடலெடுத்த பிரசாந்த் நீல்
கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்கள் மூலம் இயக்குநர் ராஜமெளலி போட்ட ரூட்டை பற்றிக் கொண்டு தரமான தயாரிப்புடன் படத்தை கொடுத்தால் இந்தியா முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் அந்த படத்தை கொண்டாடுவார்கள் என்பதை உணர்த்தி 500 கோடி வசூலை நோக்கி முன்னேறி உள்ளார்.

கோலிவுட் சொதப்பல்
பாலிவுட் படங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சொதப்பி வரும் நிலையில், கடந்த ஆண்டு மாஸ்டர், சார்பட்டா பரம்பரை, டாக்டர், மாநாடு, ஜெய்பீம் என ஏகப்பட்ட தரமான படங்கள் வெளியாகி கோலிவுட்டை முன்னுக்கு கொண்டு வந்த நிலையில், இந்த ஆண்டு அது அப்படியே வலிமை மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட படங்களால் சொதப்பியது தான் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

பொன்னியின் செல்வன் சாதிக்குமா
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் மீது தான் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மிகப்பெரிய வெற்றியை படைத்த நிலையில், பொன்னியின் செல்வன் மேக்கிங் சிறப்பாக அமைந்தாலே படம் ஹிட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், அஜித் ரசிகர்கள் விடுவார்களா
ரஜினிகாந்தின் 2.0 படத்தை ட்ரோல் செய்ததை போலவே பொன்னியின் செல்வன் படத்தையும் விஜய், அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வீழ்த்த முடிவு கட்டி விட்டால், பெரிய சிக்கல் உருவாகும் என்றும் கூறுகின்றனர். ஆனால், என்ன தான் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குவிந்தாலும், தரமான மேக்கிங் மற்றும் படம் பார்க்க நல்லா இருந்தால், மக்கள் அந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றுவது உறுதி.

கமலின் விக்ரம்
செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் ரிலீசாவதற்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் தமிழ் சினிமாவின் திறமையை இந்திய சினிமாவுக்கு எடுத்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படமும் கோலிவுட்டின் பெருமைமிகு படைப்பாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











