அஜீத்-ஷாலினிக்கு பெண் குழந்தை

2008ம் ஆண்டு அஜீத்துக்கு அட்டகாசமான ஆண்டாக மலர்ந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்த அஜீத்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினிக்கு சென்னை மருத்துவமனையில் இன்று (ஜனவரி 3) அதிகாலை அழகான பெண் குழந்தை பிறந்தது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த ஷாலினி, அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை 6 மணிக்கு அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு இரவுக்குள் குழந்தை பிறக்கலாம் என டாக்டர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஷாலினி. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நல்ல நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை பிறந்ததும் ஷாலினி 401வது அறைக்கு மாற்றப்பட்டார். இது மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் அறையாகும். அதிலும் திரைப்படத் துறையினருக்கு மிக மிக அரிதாகத்தான் ஒதுக்குவார்களாம்.
ஷாலினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அஜீத் கூடவே இருந்தார். குழந்தை பிறந்ததும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
அஜீத்-ஷாலினிக்கு குழந்தை பிறந்த செய்தியை அறிந்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் நபராக அஜீத்தைத் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.
குழந்தை பிறந்த சந்தோஷத்துடன் இருந்த அஜீத் அதுகுறித்து நம்மிடம் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதை வெளிப்படுத்த எனக்கு இப்போது வார்த்தைகளே இல்லை. இந்த புத்தாண்டை சந்தோஷத்துடன் ஆரம்பிக்க அருள் புரிந்த கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.
அஜீத்-ஷாலினியை நாமும் வாழ்த்துவோம்!


Click it and Unblock the Notifications











