அண்ணன் படத்துக்கு தம்பி பாட்டு
இசைஞானி இளையராஜாவின் குடும்பத்திலிருந்து இன்னொரு பாடகர் உருவாகியுள்ளார்.
இளையராஜாவின் குடும்பம் இசையில் மட்டுமல்ல பாட்டிலும் பட்டையக் கிளப்பிய ஒன்று. பாவலர் வரதராஜனின் கம்யூனிச இயக்கப் பாடல்களுக்கு மெட்டுப் போட்டுத்தான் ராஜா, இசையமைப்பாளராக உருவானார்.பின்னர் ராஜா இசையமைப்பாளராக உருவெடுத்தபோது அவரது இசைக்கு தம்பி கங்கை அமரன் பல பாடல்களைப் புனைந்தார். இசையமைப்பாளராக மட்டுமல்லாது சிறந்த பாடலாசிரியராகவும் விளங்கியவர் கங்கை அமரன். 16 வயதினிலே படத்தில் அவர் எழுதிய செந்தூரப் பூவே பாட்டுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
ராஜாவும், கங்கை அமரனும் கொடுத்த பல பாடல்கள் எவர் க்ரீன் பாடல்களா இன்றளவும் ரசிகர்களை லயிக்க வைத்து வருகின்றன.
இந்த வரிசையில் ராஜா குடும்பத்து வாரிசுகள் புதிதாக இணைந்துள்ளனர். ராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள சென்னை 600028 படத்தில்தான் இந்தப் புதுக் கூட்டணி உருவாகியுள்ளது.
இப்படத்தில் எட்டு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன். இதில் நட்புக்கு இங்கு பிரிவு வந்தது என்ற ஒரு பாடலையும் எழுதியுள்ளாராம் யுவன். அவர் முதல் முதலாக எழுதியுள்ள பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணனின் படம் என்பதால் மிகுந்த மெனக்கெட்டு பாடல்களுக்கு இசையமைத்துள்ளாராம் யுவன். அதேபோல பின்னணி இசையிலும் தனிக் கவனம் செலுத்தியுள்ளாராம்.
இப்படத்தைத் தயாரித்துள்ளவரும் ஒரு வாரிசுதான். இசைஞானியின் ஆஸ்தான பாடகராக ஒரு காலத்தில் கோலோச்சிய எஸ்.பி.பியின் மகன் சரண்தான் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
அப்பாக்களுக்கு பெருமை சேருங்கப்பா வாரிசுகளா!


Click it and Unblock the Notifications











