இந்திய மருத்துவத்துறையின் லட்சணத்தை தோலுரித்த அமீர்கான்

By Mayura Akilan

“மக்களை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்" இது சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் விவாதம் செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமீர்கான் வைத்த கோரிக்கை.

ஸ்டார் ப்ளஸ், டிடி, விஜய் டிவி என மூன்று சேனல்களிலும் ஞாயிறு காலை 11 மணிக்கு சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமீர்கான் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாராமும் முக்கியமான பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு விவாதம் நடைபெறுகிறது.

முதல் வாரத்தில் பெண்கருக்கொலையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கூறுவதோடு பெண் குழந்தை என்றால் அவற்றை கருவிலேயே அழிக்கும் கொடுமை பற்றி விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண் கருக்கொலைக்கு காரணமான ஸ்கேன் சென்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்துறையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றியும் இந்திய மருத்துவத்துறையின் லட்சணம் பற்றியும் புட்டு புட்டு வைத்தார் அமீர்கான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாதிக்கப்பட்டவர்களின் கருத்து அதிர்ச்சியளிக்கும் படியாக இருந்தது. ஆபரேசன் என்று கூறி பல லட்சம் ரூபாயை கறந்து விட்டு உயிரைக்கூட காப்பாற்ற முடியாத கையாலாகாத மருத்துவர்களைப் பற்றியும், மருத்துவமனைகளைப் பற்றியும் கூறியது நெஞ்சத்தை பதை பதைக்கச் செய்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சேர்மன் பேசிய போது அவரிடம் மருத்துவர்களுக்கான கொள்ளை கோட்பாடு பற்றி அமீர்கான் கூறினார். மருத்துவம் என்பது தொழில் அல்ல எனவே மருத்துவர்கள் இதை தொழிலாக பார்க்க கூடாது. சேவையாகத்தான் செய்யவேண்டும். எந்த ஒரு மருத்துவரும் நோயாளியிடம் அவருடைய நோயைக் பற்றி பயமுறுத்தும் வகையில் கூறக்கூடாது. அதேசமயம் அவருக்கு உள்ள நோயைப் பற்றி கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். மருத்துவர்கள் பிற மருத்துவமனைக்கு நோயாளியை அனுப்பும் போது அதற்கு கமிசனோ வேறு எந்த அன்பளிப்போ பெறக்கூடாது என்பது கொள்கை.

இந்த கொள்கையில் ஒன்றைக்கூட தற்போது மருத்துவர்கள் பின்பற்றுவதில்லை. நோயாளிகளுக்கு நோயினால் ஏற்படும் வேதனையையும், வலியையும் விட மருத்துவமனை நிர்வாகத்தினர் வழங்கும் பில் தொகையே அதிக வேதனை தருவதாக இருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தார்.

இதையேதான் ரமணா படத்தில் விஜயகாந்த், “ கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் கையெடுத்துக் கும்பிடுவது டாக்டர்களைத்தான். உங்களை நம்பி வந்த நோயாளிகளை பணத்துக்காக இப்படி ஏமாத்துறீங்களே" என்று கேட்பார். இன்றைக்கு பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகள் நோயாளிகளின் கழுத்தில் கத்திவைக்கும் வேலையைத்தான் செய்கின்றன. வசூல்ராஜாக்களாக செயல்படும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இன்றைக்கு பெருகி வருகின்றன.

அரசு மருத்துவமனைகளின் மீது ஏற்படும் நம்பிக்கையின்மையினாலேயே நடுத்தர வர்க்கத்தினர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நாடுகின்றனர். அவர்களின் நிலையை அறிந்த பின்னரும் நோய்க்கு ஏற்ற சிகிச்சையை மட்டுமே அளிக்காமல் மருத்துவமனையில் இருக்கும் மெஷினுக்கும் சேர்த்து மருத்துவமனை நிர்வாகங்கள் பில் போடுகின்றன. இப்படி நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவரிடம் கேட்டுக்கொண்டார் அமீர்கான்.

மருத்துவர்கள்தான் இப்படி என்றால் மருந்துகளின் விலையோ யானை விலை குதிரை விலையாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழை மக்களுக்கு சகாயவிலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் அரசே மருந்தகங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு மருந்தை தனியார் மருந்தகங்களில் வாங்குவதற்கும் அரசு மருந்தகங்களில் வாங்குவதற்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் வித்தியாசம் இருக்கிறது. மருத்துவர்களின் கொள்ளை ஒருபக்கம் மருந்தகங்களின் கொள்ளை ஒருபக்கம் என இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றனர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து நோயாளிகள்

இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்காக சேவை மனப்பான்மையோடு மருத்துவமனைகளை நடத்திவரும் மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். எவ்வளவு பெரிய நோய் என்றாலும் அதனை எளிதாக குணப்படுத்தும் மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக மதிக்கும் மக்கள் இருக்கின்றனர். நாற்பது வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மக்களுக்காக மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் ஆர். முத்துகிருஷ்ணன் எம்.எஸ்., அவர்களிடம் சத்யமேவ ஜெயதே நிகழ்சியில் அமீர்கான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர் வருத்தத்துடன் இந்த கருத்தை ஒத்துக்கொள்வதாக கூறினார்.

கார்ப்பரேட் மருத்துவமனைகள் இன்றைக்கு நோயாளிகளின் கழுத்தில் கத்தியை வைத்துதான் பணத்தை வசூல் செய்கின்றன என்பதை அவர் ஒத்துக்கொண்டார். மருத்துவத்தொழில் செய்யும் தன்னுடைய அனுபவத்திலேயே தனது சொந்தக்காரர்களுக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும் உதாரணத்துடன் தெரிவித்தார்.

நடுத்த குடும்பத்தைச் சேர்ந்த ஆசாரி தொழில் செய்யும் ஒருவரின் மகள் அபாயமான சூழ்நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை வசூல் செய்த பின்பே மருத்துவமனை நிர்வாகம் அவர்களை டிஸ்சார்ஜ் செய்த்தாகவும் அவர் கூறினார். கார்ப்பரேட் மருத்துமனைகள் எதுவும் மருத்துவத்துறைக்கான கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை என்றும் அவர் கூறினார். எனவே சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் கூறியதைப்போல நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்வதில் தவறு எதுவும் என்றும் டாக்டர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X