மாமனார், மாமியாரை துரத்தும் மருமகள்கள்.... குடும்பத்தை சிதைக்கும் சீரியல்கள்
சென்னை : ராத்திரியில டிவியை போடவே பயந்து வருதுப்பா... ஏன்னு கேட்கறீங்களா? சொத்துக்காக அப்பாவுக்கு குழி பறிக்கும் மகன், மாமியாரை தள்ளிவிடும் மருமகள், கணவரை கை நீட்டி அடித்து அவமானப்படுத்தும் மனைவி, மாமியாரை மாத்திரை கொடுத்து சாகடிக்கத் துடிக்கும் மருமகள் என ஒரே வில்லிகளும் வில்லன்களும் நிறைந்த உலகமாக இருக்கிறது சீரியல் உலகம்.
தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சேனல்களிலும் குடும்ப வன்முறை சீரியல்கள் அதிகரித்து வருகின்றன. மாமியார், மாமனார், நாத்தனார் மருமகள்களுக்கு இடையிலான சண்டையாக மாறி குடும்பங்களை சிதைத்து வருகிறது. சொந்த பந்தங்களை நம்பி வீட்டிற்குள் விடுவதற்குக் கூட பலரும் யோசிக்கும் நிலை உருவாகியுள்ளது.

தெய்வமகள் காயத்திரி
கணவனுடன் விவாகரத்து ஆன பின்னரும் வீட்டை கைப்பற்றுவதற்காக முன்னாள் கணவனுக்கு திருமணம் நடக்காமல் தடுக்கும் வில்லி காயத்திரி போடும் திட்டங்கள் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாதவை. முன்னாள் மாமியாரை சாகடித்தாவது திருமணத்தை நிறுத்த திட்டமிடுகிறாள் காயத்திரி. அதற்கு தனது தங்கையை கருவியாக பயன்படுத்துகிறாள்.

மாமியாருக்கு ஹார்ட் அட்டாக்
மாமியாருக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஐசியுவில் படுத்திருந்தாலும் இன்னும் சாகவில்லையா என்று கவலைப்படும் அக்காள் தங்கையைப் பார்த்து சீரியல் பார்ப்பவர்களுக்குத்தான் ரத்த அழுத்தம் எகிறுகிறது. யாராக இருந்தாலும் தட்டிறலாம் என்று கூறும் நம்பிக்கே போதை மாத்திரை கொடுத்து மட்டையாக்கிய காயத்திரி போன்றவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்களே என்று பேசும் நிலைக்கு ஆளாக்கிவிட்டனர் சீரியல் இயக்குநர்கள்.

வாணி ராணி டிம்பிள்
மாமியாரை டென்சன் செய்வதற்காக கணவனை பிரித்து தனிக்குடித்தனம் போன கையோடு பிசினஸ் செய்கிறேன் பேர்வழி என்று இப்போது கணவனை டென்சன் செய்து வருகிறார் டிம்பிள். சித்தியை அநாதை என்று திட்டியதற்காக அலுவலகத்தில் பெல்ட்டால் அடிப்பது டூ மச். ஆனாலும் டிஆர்பியை ஏற்ற வேறு வழியில்லையே.

கணவனை அறைந்த டிம்பிள்
எப்ப பார்த்தாலும் மனைவியை அடிப்பது போலத்தான் சீன் வைக்க வேண்டுமா? என்று யோசித்ததன் விளைவு, டிம்பிள் தனது கணவனை கை நீட்டி அறைகிறாள். கூடவே சில அடிகளையும் வாங்கிக் கொள்கிறாள். மகளுக்கு சப்போர்ட் செய்யாமல் மருமகன் அடித்தது நியாயம்தான் என்று பேசுகின்றனர் டிம்பிள் பெற்றோர்.

பிரியமானவள் அவந்திகா
பிரியமானவள் சீரியலில் அடாவடிப் பெண்ணாக வரும் அவந்திகா, மாமனாரின் நண்பரை கை நீட்டி அடிக்க, அதை தட்டிக்கேட்ட மாமனாரையும் தள்ளிவிட்டு வீட்டை விட்டே வெளியேற்றி விட்டார்.

என்னா அடி
அப்பாவை தள்ளிவிட்ட மனைவி அவந்திகாவை அவளது பெற்றோர் முன்னிலையிலேயே போட்டு சாத்து சாத்து என்று சாத்துகிறான். அதெப்படி மகளை அடிக்கலாம் என்று மருமகனை அடிக்கிறார் அவந்திகாவின் அப்பா. மொத்தத்தில் டிவி சீரியலில் ஒரே அடிதடி காட்சிகள்தான். யப்பா போதும்டா சாமி... இந்த சீரியல்களை எல்லாம் எப்போ நிறுத்தப் போறீங்க என்று கேட்கத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications