வில்லங்கமாகும் விவாத நிகழ்ச்சிகள்!... போலீஸ் கண்காணிப்பால் அலறும் சேனல்கள்!!
குடும்ப பஞ்சாயத்தில் தொடங்கி அரசியல் பஞ்சாயத்து வரை விவாதமேடை நடத்துகின்றன தொலைக்காட்சி சேனல்கள். அன்றைக்கு செய்திகளில் அதிகம் அடிபட்டது எதுவோ அதை தலைப்பாக எடுத்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசி கலைவதுதான்.
இவர்கள் விவாதிப்பதன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் சேனல்களின் ரேட்டிங்கிற்காக சாதாரண சப்பை செய்தியைக் கூட பேசி பேசி ஊதி பெரிசாக்குவார்கள்.
விலைவாசி பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைக்காக விவாதம் செய்தது போய் சின்னத்திரை நடிகர்கள், நடிகையர்கள் சந்தித்த சங்கடங்கள் என்ன? சீரியல் வில்லன்களைப் பார்த்து பொதுமக்கள் அஞ்சுகின்றனரா? என்பது வரை இப்போது பேசி கலைகின்றனர்.

வெளிவந்த கொலை
சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியின் மூலம் கொலை ஒன்று வெளியே வர போலீஸ் நுழைந்தது. அடிதடி, கல்வீச்சும் அதே நிகழ்ச்சியில் நடக்க மறியல்களும் அரங்கேறின. இது டி.ஆர்.பியை எகிறவைக்க நடந்த நாடகம் என்று கூறப்பட்டது.

போலீஸ் கண்காணிப்பு
சமீபத்தில் இப்படியொரு விவாத நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி எம்.எல்.ஏவை வாங்கு வாங்கென்று வாங்கி கடைசியில் கைதானார் தமிழாசிரியர் ஒருவர். இதன்பின்னர் சேனல்களின் விவாத நிகழ்ச்சிகளை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாம் போலீஸ்.

அரசியல் விவாதங்கள்
மோடியின் அரசியல் செல்வாக்கு பற்றி பாஜகவினரை கூப்பிடும் தொலைக்காட்சியினர். எதிரணியில் பேச காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கூப்பிட்டு மோதவிடுகின்றனர். அதிகம் இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்பது தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன் போன்றவர்கள்தான்.

விவாத மேடை
சன் நியூஸ் செய்தி சேனலில் தினசரி ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து பேசி கலைகின்றனர். கல்லூரியில் ஆடைக்கட்டுப்பாடு கொண்டு வந்தது தொடங்கி மாற்றுப் பாலினத்தவர்கள் வரை பேசுகின்றனர். ஆனால் இவர்கள் பேசி கலைவதனால் தீர்வு என்ன கிடைக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

நேர்பட பேசு
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தியாளர் 5 அல்லது 6 பேருடன் அமர்ந்து பொருளாதார சிக்கல் பற்றியோ, விலைவாசி உயர்வு பற்றியோ பேசுவார். நிகழ்ச்சியில் ஒருமுறை பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பாதியிலேயே வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆயுத எழுத்து
தந்தி டிவியில் தமிழக அரசைப் பற்றிய விவாத நிகழ்ச்சி என்றாலே ஆஜர் ஆவது விஜயதாரணி எம்.எல்.ஏவாகத்தான் இருக்கும். சட்டமன்றத்தில் பேச முடியாதவற்றை எல்லாம் மக்கள் மன்றத்தில் அதாவது விவாத மேடை நிகழ்ச்சியில் பேசி தீர்த்துக் கொள்வார்.

சத்தியம் சாத்தியமே!
சத்தியம் டிவியில் ஒளிபரப்பாகும் சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சியிலும் அனல் பறக்கும். சமீபத்தில் இதில் பங்கேற்ற விஜயதாரணி எம்.எல்.ஏதான் பார்வையாளரின் கண்டனத்திற்கு ஆளானார். அவரை கண்டுபிடித்து புழலில் போட்டுவிட்டனர்.

போன் வரமாட்டேங்குதே?
24 மணிநேரமும் பரபரப்பை பற்றவைக்க செய்தி சேனல்கள் நினைக்கின்றன. இதனால் ஏதாவது ஒரு நேரத்தில் மாறி மாறி விவாத நிகழ்ச்சிகளை நடத்தி தொலைபேசியில் பார்வையாளர்களின் கருத்துக்களையும் கேட்கின்றனர். எதையாவது ஏடாகூடமாக பேசி கைதுவரைக்கும் போய்விடக்கூடாதே என்று போன் பேசுவரை குறைத்துக் கொண்டனராம் பார்வையாளர்கள். இதனால் கலங்கிப் போயுள்ளது என்னவோ சேனல்கள்தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

சைபர் க்ரைம் பிராஞ்ச்
இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க சைபர் க்ரைம் பிரான்ஞ் தனி குழுவை அமைத்திருப்பதாக கூறுகிறார்கள். இதை வேறு எப்படி சமாளிப்பது என்று யோசிக்கின்றனராம் சேனல் வட்டாரங்கள்.


Click it and Unblock the Notifications











