ஆமா, சட்டைக் காலரைப் பிடிச்சேன்.. ஸ்ரீபிரியா டிவீட்டுக்கு பதில் சொல்லப் போவதில்லை.. குஷ்பு
சென்னை: நிஜங்கள் நிகழ்ச்சி மூலம் தம்பதிகள் இடையேயான உறவை பலப்படுத்தியுள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்த நடிகைகள் யார் என மூத்த நடிகையான ஸ்ரீப்ரியா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அவருக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து குஷ்பு கூறியிருப்பதாவது,

ஸ்ரீப்ரியா
பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் நடத்தும் பஞ்சாயத்து மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் குறித்த ஸ்ரீப்ரியாவின் ட்வீட் பற்றி மீடியாக்கள் பேசி வருகின்றன. அவரது கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. அவர் எனக்கு சீனியர், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எல்லோரையும் போன்றே அவருக்கும் அவரது கருத்தை தெரிவிக்கும் உரிமை உள்ளது.

அரசியல்
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பெண்கள், குழந்தைகளை பாதிக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தினேன். நிஜங்கள் நிகழ்ச்சியால் மக்கள் தங்களின் பிரச்சனைக்கு தீர்வு கோரி எங்களை தொடர்பு கொள்கிறார்கள்.

கண்ணீர்
பிரச்சனையுடன் வருபவர்கள் எங்களிடம் அது குறித்து வெளிப்படையாக பேசுகிறார்கள். அவர்களின் கண்ணீரும், கதைகளும் உண்மையானது. ஒரு பிரச்சனையை தீர்க்க இரு தரப்பிடமும் பேச வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன்.

அதிகாரிகள்
எங்கள் நிகழ்ச்சியில் அரசு நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், மனோதத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். உண்மையான அக்கறையுடன் தான் பேசுகிறேன். நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

நீங்கள் ஏன்?
நீங்கள் ஏன் நடுவராக உள்ளீர்கள் என்று கூறினால், முடிவுகளை பாருங்கள் என்பேன். நாங்கள் மக்களுக்கு இடையே பாலமாக உள்ளோம். தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளோம்.

சட்டை காலர்
நான் ஒரு ஆணின் சட்டை காலரை பிடித்தேன் என்றால் மனைவி, குழந்தைகளை தகாத வார்த்தையால் பேசியதால் அப்படி செய்தேன். என் இடத்தில் யார் இருந்திருந்தாலும் அதையே தான் செய்திருப்பார்கள். தகாத வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.


Click it and Unblock the Notifications











