ஆரம்பமே அமர்களம்தான்... தெய்வமகள் தொடரின் சில சுவாரஸ்யங்கள்
சில தொடர்கள் ஆரம்பமே அழுகையாக இருக்கும். ஆனால் பெண்களைப் பற்றியும் அவர்கள் அழகுப் பதுமைகளாக மட்டும் வலம் வருவதில்லை குடும்பத்தில் சிக்கல் என்றால் அதை தீர்க்க சரியான முடிவெடுப்பார்கள் என்றும் உணர்த்தும் வகையில் புதிய தொடர் ஒன்று சன் தொலைக்காட்சியில் தொடங்கியுள்ளது.
திருமதி செல்வம் தொடர் நிறைவடைந்ததை அடுத்து தற்போது இரவு 8 மணிக்கு 'தெய்வமகள்' ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. குளுகுளு லொகேசன்ஸ், புதிய முகங்கள் என ஆரம்பமே அமர்களம்தான்.
எல்லாரும் பொண்ணு பொறந்துட்டா... செலவு வந்து பொறந்துடுச்சுனு நினைப்பாங்க. நான் அப்படி இல்லீங்க... மகாலட்சுமியே மகளா வந்து பொறந்தானு நினைச்சேன்...'' என்று பெண்களைக் கவரும் வகையில் முன்னோட்டம் போட்டு இல்லத்தரசிகளை ஈர்த்துள்ளனர்.

மூன்று பெண் குழந்தைகள்
பூங்குடி கிராமத்தில் வசிக்கும் அன்பாலயா பிரபாகரன், ராஜலட்சுமி தம்பதியினருக்கு மூன்று பெண்குழந்தைகள். இதில் சத்யா கதையின் நாயகி. இதே பெயருடைய மற்றொரு பெண்ணின் மூலம் கதையில் சுவாரஸ்யம் கூடுகிறது.

பெண் பார்க்கும் சென்டிமென்ட்
இயக்குநர் குமரன் தன்னுடைய தொடர்களான திருமதி செல்வம் தென்றல், தொடர்களில் பெண் பார்க்கும் காட்சியைத்தான் தொடக்க எபிசோடிலேயே வைத்திருப்பார். அதே சென்டிமென்ட் தெய்வமகள் தொடரிலும் தப்பவில்லை.

அத்தையாக அனுராதா
கோவையில் தொழிலதிபராக இருக்கும் அனுராதாவின் மகன் கார்த்திக், பூங்குடி கிராமத்திற்கு பெண் பார்க்க வருகிறான். அங்கே எதிர்பாராத விதமாக கோவிலில் சத்யாவை சந்திக்கிறான்.

ஜே.கே. மகளும் சத்யாதான்
அதற்கு முன்பாகவே அவன் ஜே.கே. மகளான மற்றொரு சத்யாவை பார்த்தது வேறு சமாச்சாரம். கார்த்திக் பெண் பார்க்க வந்ததே ஜே.கே. மகளைத்தான். ஆனால் தவறுதலாக பிரபாகரன் மகள் சத்யாவை பெண் பார்த்துவிட்டு போகிறான். இந்த பெயர் குழப்பம்தான் கதையில் சஸ்பென்ஸ்.

500 பவுன் நகை கேட்ட அனுராதா
ஆனால் கார்த்திக் அம்மா அனுராதா ஜே.கே.வின் மகள் சத்யாவை வந்து பெண் பார்த்துவிட்டு 500 பவுன் நகை, ஆடி கார், 50 லட்சம் வரதட்சனை கேட்டுவிட்டு போகிறார்.

குடும்பத்தில் சிக்கல்
திருமணம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே கடன் தொந்தரவால் அன்பாலயா பிரபாகரனுக்கு ஹார்ட் அட்டாக் வரவே அட்மிட் ஆக வேண்டியிருக்கிறது. இது சத்யாவிற்கு தெரியவர துடித்துப் போகிறாள். திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு போய் கார்த்திக்கிடம் பேசுகிறாள்.

யாருடன் திருமணம்
ஆனால் அதற்கு சம்மதிக்காத கார்த்திக் திருமணம் செய்து கொள்வோம். இருவரும் சேர்ந்து குடும்பத்தைக் கவனிக்கலாம் என்று கூறி சத்யாவின் மனதை மாற்றுகிறான். கடைசியில் யாருடன் திருமணம் நடக்கிறது என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.

வேலைக்குப் போகும் பெண்கள்
''இது வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றிய கதை என்கிறார் கதையின் இயக்குநர் குமரன். குடும்பத்தின் சுக துக்கங்களை பெண்கள் எப்படி தாங்குகின்றனர் என்பதை விளக்குவதான் தொடரின் ஒன்லைன். தமிழ் நாட்டுல வேலைக்குப் போற, பிஸினஸ் பண்ற ஒவ்வொரு பெண்ணோட பிரதிபலிப்பாவும் தான் 'தெய்வ மகள்' நடமாடப் போறா என்றும் சொன்னார் குமரன்.

பிரபலங்கள் நடிக்கும் தொடர்
இந்த தொடரில் அன்பாலயா பிரபாகரன், ராஜலட்சுமி, ஜே.கே, அனுராதா, வாணிபோஜன் ஆகியோர் நடித்துள்ளனர். பொள்ளாச்சி, ஆனைமலை என குளு குளு ஏரியாவில் படமாக்கியுள்ளனராம்.

விளம்பரமாடலான வாணி போஜன்
கதையின் நாயகியாக வரும் வாணி போஜன் ஏற்கனவே 150 விளம்பரங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம். அதோடு ஆஹா, மாயா தொடரிலும் நடித்த அனுபவம் இருக்கிறதாம்.

அழகான கதாநாயகி
தெய்வமகள் தொடரில் ஆரம்பம் அமர்களமாகத்தான் இருக்கிறது. இதே வேகத்தோடு போனால் ஏராளமான இளம் ரசிகைகளை கவரலாம் என்கின்றனர் தொடரை பார்த்தவர்கள்.


Click it and Unblock the Notifications











