சொந்த வீடு வாங்குவதில் உள்ள பிரச்சினைகள் … என்தேசம் என் மக்கள் எச்சரிக்கை!

சில வருடங்களுக்குப் பின்னர்தான் பிரச்சினைகள் பூதாகரமாகும். கட்டப்பட்ட வீட்டில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதை பில்டரிடம் கேட்கவும் முடியாது.
அதேபோல் பில்டர்களின் தரப்பில் உள்ள பிரச்சினைகளையும் பார்க்கவேண்டும். வீடு வாங்குபவர்களும், பில்டர்களும் பரஸ்பரம் என்ன செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விஜய் டிவியின் என்தேசம் என் மக்கள் நிகழ்ச்சி அமைந்திருந்தது.
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள். அந்த அளவிற்கு இரண்டுமே சிக்கலானது. ஒரு வீடுகட்டும் போது என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் என்பது யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. அதேபோலத்தான் திருமணமும் வரன் பார்ப்பதில் தொடங்கி திருமண நாள் வரை எத்தனையோ இடையூறுகள் எழும்.
இன்றைக்கு உள்ள கால கட்டத்தில் நகரங்களில் தனியாக இடம் வாங்கி பார்த்து பார்த்து வீடு கட்டுவது என்பது எல்லோராலும் முடியாத காரியம். அதனால்தான் பில்டர்களின் விளம்பரங்களைப் பார்த்து அவற்றை நாடிப் போய் வாங்குகின்றனர். இதில் எண்ணற்ற பிரச்சினைகள் எழுகின்றன.
லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கிய வீட்டில் கார் பார்க்கிங் கூட சரியில்லை என்று புகார் செய்தார் பாதிக்கப்பட்ட நபர்.
வாடகைக்கு இருந்த வீட்டை காலி செய்துவிட்டு ஆசை ஆசையாய் புதிதாக வாங்கின வீட்டில் குடியேறிய பின்னர்தான் ஏமாந்து போனது தெரிந்தது. அவர்கள் பேசியதும், சொன்னதும் வேறு, தரமற்ற பொருட்களால் வீட்டைக் கட்டி ஏமாற்றி விட்டனர் என்று கூறி ஆதங்கப்பட்டார் மற்றொரு வாடிக்கையாளர்.
சொந்த நிலத்தில் பில்டரைக் கொண்டு வீடு கட்டுவதிலும் கூட சிக்கல் உள்ளது என்று கூறினார் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர். ஒப்பந்தம் சரியாக போடாத காரணம் ஒருபுறம், போடப்பட்ட ஒப்பந்தத்தில் எல்லா சரத்துக்களும் சரியாக இருக்கிறதா என்பதை படித்துப் பார்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாதததும் கூட இப்படி ஏமாற்றப்படுவதற்குக் காரணம் என்றனர் நிகழ்ச்சியில் பங்கேற்ற வழக்கறிஞர்கள்.
ஆனால் பில்டர்கள் தரப்போ, வாடிக்கையாளர்கள்தான் தங்களை டார்ச்சர் செய்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பணம் கொடுப்பதில்லை, அதனால் சிரமப்படுவது பில்டர்கள்தான் என்று தங்கள் தரப்பு கருத்தை தெரிவித்தனர்.
தரமான பில்டரா என்று தேர்ந்தெடுப்பது அவசியம். பில்டர் பற்றி புகார் கூற வேண்டுமெனில் பில்டர்ஸ் அசோசியேசனில் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார் அந்த அசோசியேசனைச் சேர்ந்த தலைவர்.
எது எப்படியோ வீடு என்பது இன்றைக்கு அனைவருக்கும் கனவு. அது நிம்மதியும் சந்தோசமும் தரக்கூடியதாக இருக்கவேண்டுமே ஒழிய அதை வாங்கியதன் மூலம்தான் நிம்மதியும் சந்தோசமும் போய்விட்டது என்ற நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது.
எனவே வீடு வாங்குபவர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியம் என்று கூறி முடித்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்.
இந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர் ஒரு கட்டுமான நிறுவனம் என்பதுதான் ஆச்சரியமான விசயம்.


Click it and Unblock the Notifications











