அப்பா உதவுங்க அப்பா.. மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்னை.. முதலமைச்சரிடம் மன்றாடிய கர்ப்பிணி ஜாய் கிரிசில்டா!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசல்டா விவகாரம் கடந்த இரண்டு வாரங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயமாக உள்ளது என்பது தெரிந்ததே. மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரத்தில் புகார் அளித்திருந்தார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா. இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறிக் கொண்டு உள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியும் அளித்து வருகிறார்.
இப்படி இருக்கும்போது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து தனக்கும் தனது குழந்தைக்கும் நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ சென்னை நகர ஆணையரிடம் நான் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது, அதில் பிரபல சமையல்காரரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டார். இப்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நான் என் பார்வையற்ற தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். இப்போது எனது புகாரின் நிலை எனக்குத் தெரியவில்லை.

அப்பாவி: இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி போல பல விழாக்களில் மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது. அவரை அப்பாவி போல அவர் காட்டிக் கொண்டு வருகிறார். மேலும் அவர் எனக்கு எதிராக அநாகரீகமான, ஆபாசமான மற்றும் உள்நோக்கத்துடன் சமூக ஊடக பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறார். அப்பா, உங்கள் அரசாங்கத்தை என்னைப் போன்ற துரதிர்ஷ்டவசமான பெண்கள் நம்புகிறார்கள். இந்த பிரச்னையில் தலையிட்டு நீதி வழங்குமாறு நான் உங்களிடம் கைகூப்பி மன்றாடுகிறேன்.

பிறக்காத குழந்தைக்கு நீதி: எந்தவொரு விஐபியும் ஒரு பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்துவிட்டு, அதற்கான தண்டனையை அனுபவிக்காமல் சுற்றித் திரிய முடியுமா? எனது பிறக்காத குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் நேரடியாக முதலமைச்சரை டேக் செய்து அப்பா என்று குறிப்பிட்டு ஜாய் கிரிசல்டா தனது கோரிக்கையை வைத்துள்ளதால் அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











