ரஜினிக்கு கதை சொல்வது விளையாட்டில்லை: கே.வி. ஆனந்த்
கே.வி. ஆனந்த் அடுத்தப்படம் விஜயுடன்தான், ரஜினிக்கு கதை சொல்லியிருக்கிறார் ஆனந்த், என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் ரஜினிக்கு கதை சொல்வதெல்லாம் விளையாட்டில்லை என்று பதிலளித்துள்ளார் ஆனந்த்.

போட்டோ கிராபர் டூ மாற்றான்
சன் தொலைக்காட்சியின் சூரியவணக்கம் விருந்தினர் பக்கத்தில் பேசிய கே.வி. ஆனந்த், புகைப்படக் கலைஞரான தனது வாழ்க்கையை தொடங்கியது முதல் மாற்றான் படம் இயக்கியது வரை தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நாவல் புத்தகத்திற்கு அட்டைப்பட போட்டோகிராபராக பணிபுரிந்த போது ஏற்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் தெரிவித்தார்.

அஜீத், விஜய் நண்பர்கள்
சினிமாவில் கேமராமேனாக பணியாற்றியபோதே அஜீத், விஜயுடன் நல்ல நட்பு ஏற்பட்டதாக கூறிய ஆனந்த் அவர்களுக்கான கதை ரெடியாகும்போது அவர்களை வைத்து படம் இயக்குவேன் என்று கூறினார்.

ரஜினி எளிமையான மனிதர்
ரஜினி நடித்த சிவாஜி படத்தில் கேமராமேனாக பணியாற்றியபோது ரஜினியுடன் நேரடியாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. எளிமையான மனிதர். ஷாட்டிற்கு கரெக்டாக வந்து நிற்பார். சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைந்த பின்னரும் பணியின் மீது அதே பக்தி இருக்கிறது என்று கூறினார்.

கதை சொல்வது விளையாட்டா?
ரஜினிக்கு நான் கதை சொல்லியிருக்கிறேன் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை. அவருக்கு கதை சொல்வது விளையாட்டா? அதுக்கெல்லாம் இன்னும் நாள் இருக்குங்க என்று கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆனந்த்.

கனாக்கண்டேன் டூ மாற்றான்
கேமராமேனாக இருந்து கனாக்கண்டேன் படத்தை முதன் முதலாக இயக்கியது ஒரு சவாலாக இருந்தது. அதுதான் அயன், கோ, மாற்றான் என படங்களை இயக்குவதற்கு அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இதுவரை இயக்கியுள்ள நான்கு படங்களிலும் கனாக்கண்டேன் படம்தான் மனசுக்கு பிடித்த படம் என்றும் ஆனந்த் கூறினார்.

சூர்யாவுக்கு 5 சம்பளம்
மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்த சூர்யாவுக்குதான் சிரமங்கள் அதிகம் என்று கூறிய ஆனந்த் அவர் பட்ட சிரமத்திற்காக சூர்யாவிற்கு 5 சம்பளம் கொடுக்கலாம் என்று கூறினார்.

நான் நடிக்க மாட்டேன்
இப்போதுள்ள இயக்குநர்கள் நடிகர்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர். ஆனால் எனக்கு நடிக்கத் தெரியாது என்று ஒப்புக்கொண்டார் ஆனந்த். அதேபோல் நான் படத் தயாரிப்பு வேலையிலும் இறங்கமாட்டேன் என்றும் ஆனந்த் கூறினார். புதிதாக படம் இயக்குபவர்கள் இன்றைய ட்ரெண்ட்டுக்கு தகுந்த மாதிரி நன்றாக படித்து தெரிந்து கொண்டுவருவதுதான் வெற்றியைத் தேடித் தரும் என்றும் ஆனந்த் கூறினார்.


Click it and Unblock the Notifications











