நாதஸ்வரம் முடியப்போகுதாமே... அப்போ கோபி... மலரை இனி பார்க்க முடியாதோ?
5 ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நாதஸ்வரம் தொடருக்கு என்ட் கார்டு போடப்போகிறார் தொடரின் இயக்குநரும் தயாரிப்பாளருமான திருமுருகன்.
நாதஸ்வர கலைஞர்களின் குடும்பத்தில் நடைபெறும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடரின் கடைசி எபிசோடில் நாதஸ்வர கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார் திருமுருகன்.
இதற்காக 90 கலைஞர்களை ஒரே நேரத்தில் கச்சேரி செய்ய வைத்து படமாக்கி அதனை தொடரில் இணைத்துள்ளாராம். இது கடைசி எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

சொக்கு – மயிலு
நாதஸ்வரம் தொடரின் மிக முக்கிய கதாபாத்திரங்கள் சொக்கலிங்கம் அவரது தம்பி மயிலு... இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்த மௌலி, பூவிலங்கு மோகன் ஆகியோர் நிஜமாகவே உடன்பிறந்த தம்பிகளாகவே ஒன்றிப்போய் நடித்திருக்கின்றனர்.

கோபி – மலர்
இந்த தொடரின் நாயகனும் இயக்குநர் தயாரிப்பாளருமான திருமுருகன் கோபியாக இதில் வாழ்ந்திருக்கிறார். அவரது மனைவியாக மலர்.. அமைதியான ஆர்பாட்டமில்லாத நடிப்பில் நம்ம வீட்டுக்கு இப்படி ஒரு மருமகள் வரமாட்டாளா என்று இல்லத்தரசிகளை ஏங்கவைத்திருப்பார்.

பாசம் ரொம்ப முக்கியம்
தன்னுடன் பிறந்த தங்கைகள் மயிலு சித்தப்பாவின் மகள் என 5 பேரையும் சொந்த சகோதரிகள் போலவே பாசம் காட்டு அண்ணன் கோபி... மச்சினன், அண்ணன், அண்ணி, சித்தி, பாட்டி, மனவளர்ச்சி சரியில்லாத சித்தப்பா என நாதஸ்வரம் தொடரில்.பாசப்போராட்டமே நடந்திருக்கிறது.

புரட்சி இயக்குநர்
கதாநாயகியாகட்டும்... தங்கையாகட்டும், மனைவியின் தங்கையாகட்டும் அனைவருக்கும் முதல்வாழ்க்கை சரியில்லை என்றால் அதை தூக்கி எறிந்துவிட்டு புரட்சிகரமாக மறுமணம் செய்து வைத்திருப்பார் இயக்குநர் திருமுருகன்.

கின்னஸ் ரெகார்ட்
இந்த தொடர் கடந்த 5 ஆண்டுகளாக முழுக்க முழுக்க காரைக்குடியில் படமாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு எபிசோட் முழுவதும் லைவ் ஆக ஒளிபரப்பானது. இதற்காக கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்றது.

மலருக்கு என்ன ஆச்சு?
தற்போது சீரியல் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. மனைவி மலர் பிரசவத்திற்காக ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது தெரியாமல் கோபி தவித்துக்கொண்டிருக்கிறார்.

பிரசாத் நிலை என்ன?
மனநலம் தப்பிய நிலையில் மாயமான பிரசாத் எங்கே இருக்கிறாரோ? எப்படி இருக்கிறாரா என்று அவரது குடும்பத்தினர் தேடி வருகின்றனர். தான் யார் என்றே தெரியாமல் ஹோட்டலில் வேலை செய்யும் பிரசாத் குடும்பத்துடன் இணைவாரா என்பது போன்ற பல கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் விடை கிடைக்கும்.

முடிவுக்கு வரும் சீரியல்
நாதஸ்வரம் தொடர் வரும் மே மாதம் 9ஆம் தேதி முடியப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான இறுதி எபிசோட் காரைக்குடி அருகே கொத்தமங்கலத்தில் படமாக்கப்பட்டது.

90 கலைஞர்கள் கச்சேரி
40 நாதஸ்வரம், 40 தவில், 10 பின்னணி இசைக்கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கச்சேரி நேற்று படமாக்கப்பட்டது.

கலைஞர்களுக்கு மரியாதை
கதையோடு ஒன்றிப்போனது நாதஸ்வரம்... இந்த நாதஸ்வர கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தொடரின் இறுதியில் கச்சேரி படமாக்கப்பட்டதாக இயக்குநர் திருமுருகன் தெரிவித்தார். 5 ஆண்டுகளாக தொடரை பார்த்து ரசித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் திருமுருகன்.

மீண்டும் வருவேன்
சன் டிவியில் தினசரி 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடர் தற்போது 1300 எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. மே 9ஆம் தேதி தொடர் முடிவடைந்தாலும் மே 11ஆம் தேதி புதிய தொடருடன் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார் திருமுருகன்...


Click it and Unblock the Notifications











