அம்மன்னா கோடலா... ஆந்திராவில் செட்டில் ஆன நளினி
சென்னை: தமிழில் 'சின்னப்பாப்பா பெரிய பாப்பா' சீரியலில் மாமியராக நடித்து இரண்டு மருமகள்களை அலற வைக்கும் நளினி, தெலுங்கு சீரியல்களிலும் மருமகள்களை அலற வைக்கிறார். கண்களை உருட்டி... உடலை ஒரு ஆட்டு ஆட்டி அவர் பேசும் வசனத்திற்கு தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகரித்துள்ளார்களாம் எனவேதான் தெலுங்கு சீரியலில் நடிக்க நளினிக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. சென்னைக்கு நான்கு நாட்கள் மட்டுமே வந்துபோகும் நளினி தெலுங்கு சீரியலுக்காக ஹைதராபாத்தில் செட்டில் ஆகி விட்டாராம்.
எண்பதுகளில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நளினி, நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பில் இருந்து விலகினார். ராமராஜனை விவாகரத்து செய்த பின்னர், சீரியல் பக்கம் கவனம் செலுத்தினார்.
கிருஷ்ணதாசி சீரியல் மூலம் டிவி சேனலுக்குள் வந்தாலும் சன்டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் அவர் நடித்த மாமியார் பாத்திரம் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. தமிழில் மட்டுமல்லாது இப்போது தெலுங்கு சீரியலிலும் பிஸியாக நடித்து வருகிறார் நளினி.

நளினியின் உருட்டல் நடிப்பு
வில்லி கதாபாத்திரத்திற்கு டாடா காட்டிய நளினி, காமெடி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ஆல் இன் ஆல் அலமேலு, மடிப்பாக்கம் மாதவன், சின்னப்பாப்பா பெரிய பாப்பா போன்ற சீரியல்களில் காமெடி கலந்த கதாபாத்திரங்களில் கண்களை உருட்டி நடித்து ரசிகர்களை பயமுறுத்தி வருகிறார்.

கஞ்சதனமான மாமியார்
மாந்தோப்பு கிளியே படத்தில் சுருளிராஜன் நடித்தது போல கஞ்சத்தனமான மாமியாராக அம்மன்னா கோடலா சீரியலில் நடித்துள்ளார். இந்த சீரியலுக்காக கடந்த ஆண்டு ஆந்திரா அரசு விருது, பெஸ்ட் அத்தை விருது என பல விருதுகளை வாங்கியுள்ளார்.

450 எபிசோடுகளை தாண்டி ஓட்டம்
தெலுங்கைப் பொறுத்தவரை சினிமா, சீரியல் என இரண்டிலுமே பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நளினி. அம்மன்னா கோடலா 450 எபிசோடுகளை தாண்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதனால் தெலுங்கில் நளினிக்கு வாய்ப்புகள் குவிகிறதாம். தமிழில் சில படவாய்ப்புகள், சீரியல்கள் வந்தபோதும் கால்சீட் கொடுக்க முடியவில்லையாம்.

நளினிக்கு பிடித்த நடிகை
சின்னப் பாப்பா பெரிய பாப்பாவில் மதுமிதாவின் நடிப்பு நளினிக்கு ரொம்ப பிடிக்குமாம். ஒரு சின்ன நாட் சொன்னால் பல கோணங்களில் அதை நடித்துக்காட்டுவார். திறமையான நடிகை. நானே அவரை பிரமித்துப்பார்ப்பேன் என்று கூறியுள்ளார் நளினி.
சின்னப்பாப்பாவிற்காக வருகை
பிள்ளைகளின் திருமணத்திற்குப் பின்னர் இப்போது ஐதராபாத்தில் செட்டிலாகி விட்ட நளினி சின்ன பாப்பா பெரிய பாப்பாவுக்காக மட்டுமே மாதத்தில் நாலு நாட்கள் சென்னை வந்து செல்கிறார். இப்படி எல்லோரும் சென்னை, மும்பைன்னு போயிட்டா தமிழ் ரசிகர்கள் ஏங்கி போயிர மாட்டாங்களா சின்னப்பாப்பா.


Click it and Unblock the Notifications











