நவீன சாதனங்களால் நன்மையா? தீமையா? நீயா நானாவில் விவாதம்
டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெசின், ஏசி, செல்போன், லேப்டாப், ஐபாட் என நவீன சாதனங்கள் இன்றைக்கு மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளாகிவிட்டன.
சமையல் அறையில் மாடுலர் கிச்சன் தொடங்கி கியாஸ், இண்டக்ஸ்சன் ஸ்டவ், எலக்ட்ரிக் குக்கர், மிக்ஸி என பல சாதனங்கள் பெண்களின் அவசிய தேவைகளாக மாறிவிட்டன.
இத்தகைய நவீன சாதனங்களுக்குப் பழகிப் போன மனித மனம் ஒருநாள் இந்த சாதனங்கள் இல்லா விட்டாலும் வாடிப்போய் விடுகிறது. ஒரு படபடப்பு, டென்சன் என இளம் தலைமுறையினர் ஆளாகிவிடுகின்றனர். இந்த சாதனங்கள் மனிதர்களின் பணியை எளிதாக்குகிறதா? அல்லது அவர்களை அடிமையாக்குகிறதா என்பதைப் பற்றி இந்த வாரம் நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது.

செல்போன், ஐ பாட்
இளம் தலைமுறையினர் இன்றைக்கு செல்போன், ஐ பாட் இல்லாமல் இருப்பதில்லை. ஒருசிலர் இரண்டு செல்போன் கூட வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் செல்போன் இல்லாமல் இருப்பவர்களும் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அடிமையான இளைய தலைமுறை
இந்த நவீன சாதனங்கள் நம்மை அடிமைப் படுத்திவைத்திருக்கின்றன. அதிலிருந்து மீளவே முடியாத அளவிற்கு பலரும் சிக்கிக் கொண்டிருக்கின்றன என்று கூறினர் ஒரு தரப்பினர்.

நேரம் மிச்சமாகிறது
நவீன சாதனங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. அது ஒரு தனியான அந்தஸ்தை தருகிறது என்றனர் நவீன சாதனங்களை விரும்புபவர்கள்.

பொருட்களை வாங்க சம்பாதிக்கின்றோம்
கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கின்றனர். எனவே நேரமின்மை காரணமாக நவீன சாதனங்களை வாங்கவேண்டியிருக்கிறது. அதற்காகவே சம்பாதிக்கின்றோம் என்றார் ஒருவர். நவீன பொருட்களை வாங்கவேண்டும் என்பதற்காகவே சம்பதிப்பதாகவும் கூறினார் ஒருவர்.

செயற்கையான ஏழ்மை
ஆனால் இந்த நவீன சாதனங்கள் செயற்கையான ஏழ்மை உருவாக்கிவிடுகிறது என்றார் ஒருவர். பணக்காரரக்கும் ஏழைக்கும் பல தடங்களை உருவாக்கிவிடுகிறது என்றார்.
இந்தப் பொருட்கள் நேரம் மிச்சப்படுகிறது என்பதோடு நேரத்தை இது விழுங்குகிறது என்றும் தெரிவித்தார். புதிய தேவைகளை உருவாக்குவதற்காக இந்தப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

திருப்தி அடையவில்லை
தினம் தினம் புதிய பொருட்கள் வருவதால் தங்களால் திருப்தி அடையமுடியவில்லை என்றார் நவீன சாதனங்களை விரும்புபவர்கள். சாதனங்கள் மன நிம்மதியை தருகிறதா என்று கூற முடியாது அந்த நிமிடத்தில் அதை வைத்து அமைதியாக வாழ்கிறேன் என்றார்.

இயந்திர வாழ்க்கை
இந்த இயந்திரங்கள் மனிதர்களையும் இயந்திரமாகவே மாற்றிவிடுகிறது. இந்த சாதனங்களை வாங்குவதன் மூலம் நமக்குள் நடக்கும் விசயங்களை கவனிக்க தவறிவிடுகிறோம் என்றார் நவீன சாதன எதிர்ப்பாளர். இந்த சாதனங்கள் நம்மை அடிமைப்படுத்தி நின்று நிதானித்து கவனிக்க விடுவதில்லை என்றார்.

எல்லாமே அவசியம்தான்
சிலருக்கு அவசியமான பொருட்கள் மற்றவர்களுக்கு அநாவசியமாகத் தெரிகிறது. சினிமா, வானொலி, தொலைக்காட்சி ஆகிய பொருட்களின் தொடர்ச்சியாக கணினி, செல்போன், ஐ.பாட் வந்து கொண்டிருக்கிறது. இயற்கையோடு இணைந்த நவீன பொருட்களோடு வாழ்வது தவறில்லை என்றார் ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர். ஸ்ரீனிவாசன். இயற்கையோடு அன்னியப்பட்டு போய்விடக்கூடாது. இயற்கையோடு அந்நியப்பட்டு போகக்கூடிய பொருட்களை அனுமதிக்கக் கூடாது என்றார்.

மனிதத் தன்மை இருக்கிறதா? - டி.ஆர்.பி ராஜா.
மண்சட்டியில் சமைத்த காலம் போய் இன்றைக்கு நான் ஸ்டிக் பொருட்களை வைத்து சமைக்க ஆரம்பித்திருக்கிறோம்.
அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் தவறில்லை. அவற்றில் மனிதத் தன்மை இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும் என்றார் மற்றொரு சிறப்பு விருந்தினர் டி.ஆர்.பி ராஜா. எம்.எல்.ஏ ராஜாவிற்கு நவீன சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. சட்டசபையில் கூட செல்போனை பயன்படுத்தியதாக 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். ஒருவேளை இந்த நிகழ்ச்சியில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது கொஞ்சம் பொருத்தமானதாகத்தான் இருந்தது.

இது ஒரு வியாபார யுக்தி
இன்றைக்கு சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் எல்லாமே மனிதர்களை வாங்கத் தூண்டக்கூடியவைதான். இது ஒரு வியாபார சங்கிலிதான். ஒரு அளவிற்கு மீறி நிலைமை கைமீறி போய்விடக்கூடாது. பக்கத்துக் கடைக்கு நடந்து போகாலாம். நவீன சாதனங்களை நமக்கு ஏற்றார் போல பயன்படுத்தவேண்டும் என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்.


Click it and Unblock the Notifications











