துப்புறவு தொழிலாளியாக ஒரு நாள்…நீயா நானா கோபிநாத் எடுத்த முயற்சி
சென்னை : விஜய் டிவியில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் மிக முக்கியமான நிகழ்ச்சி நீயா நானா. இதனை தொகுத்து வழங்குபவர் கோபிநாத். ஒவ்வொரு வாரமும் புதிய தலைப்புடன் மக்களை சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும் ஒரு நிகழ்ச்சியாக இது உள்ளது.
நீயா நானா கோபிநாத் தமிழ்பேசும் அழகிற்காக பல ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். விவாதங்களை முன்னெடுக்கும் இரண்டு தரப்பினரையும் லாவகமாக கையாண்டு எந்தப் பக்கம் நியாயம் உள்ளது எவர் பக்கம் அறம் உள்ளதோ அவர்களை ஜெயிக்க வைக்கும் அவரது அறிவாற்றல் மக்களை அவர் பக்கம் ஈர்க்கும் தனித்திறமை.
பன்முகத்தன்மை கொண்ட நீயா நானா கோபிநாத் துப்புரவு தொழிலாளர்களின் கஷ்டங்களை உழைப்பை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக ஒரு விஷயத்தை செய்து காட்டியுள்ளார். அது மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.

துப்புரவு தொழிலாளியாக ஒரு நாள்
டிவி தொகுப்பாளராக, ரேடியோ ஜாக்கியாக, ரிப்போர்ட்டராக, செய்தி தொகுப்பாளராக பல முகங்கள் கொண்ட கோபிநாத் துப்புரவு தொழிலாளி ஆகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். துப்புரவு தொழிலில் ஈடுபடும் ஒருவரை சந்தித்து அவரின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொண்டு, ஒருநாள் அவர்கள் செய்யும் வேலையை அவர்களுடன் சேர்ந்து அவர்கள் உபயோகப்படுத்தும் வாகனத்தை பயன்படுத்தி ஒரு துப்புரவுத் தொழிலாளியாக அந்த வழியை அந்த செயலின் மூலம் உணர்த்தியுள்ளார். ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளியின் உழைப்பு எத்தகைய மகத்தானது என மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் அவர்களின் அன்றாட வேலை மதியம் ஒரு மணி அளவில் முடிகிறது. அதுவரை அவர்களின் வாகனத்தை ஓட்டுவது, மக்களிடமிருந்து குப்பையை சேகரிப்பது, அவர்களுடன் உரையாடுவது என ஒரு சக தொழிலாளியாக பயணம் செய்துள்ளார் நீயா நானா கோபிநாத்.

புது வாகனம்
துப்புரவு தொழிலாளர்களின் வேலையை சுலபமாக மாற்றும் விதமாக அவர்களுக்கு புதியதொரு பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. டெம்போவை போன்ற வடிவிலான அந்த வாகனம் ஒருவர் மட்டும் அமர கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. வண்டியின் பின் பக்கம் குப்பை கொட்டுவதற்கு சில குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அபாயகரமான பொருட்களை போடுவதற்கு ஒரு தொட்டி, அதாவது பல்பு, மாஸ்க், மெடிக்கல் கழிவுகள் போன்ற பொருட்கள். மக்காத பொருட்களை போட ஒரு தொட்டி, பிளாஸ்டிக் கவர் பிளாஸ்டிக் பாட்டில் போன்றவை. இவை இல்லாமல் எளிதில் மக்கும் பொருட்களை போட ஒரு தொட்டி என பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இதை மக்களுக்கு முன்னமே சொல்லி இருப்பதால் மக்கள் தங்களது குப்பைகளை பிரித்து தனித்தனியாக தருவதால் வேலை சற்று சுலபமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

புது பாட்டு
மிக முக்கியமாக இதற்கு முன்னர் துப்புரவு வண்டி வரும் போது துப்புரவு தொழிலாளி கையிலிருக்கும் விசில் அடிப்பார்கள், பிறகு அதே கையால் குப்பை அள்ளுவார்கள். மறுபடியும் அதே விசில் அடிப்பார்கள். தற்போது அந்த அவலம் நிறுத்தப்பட்டுள்ளது. விசிலுக்கு பதிலாக ஒரு பாடல் போடப்பட்டு வருகிறது. " ஓஹோ இது நம்ம ஊரு " என துவங்கும் அந்த பாடல் கேட்டதும் மக்கள் வெளியே வந்து குப்பையை தரம் பிரித்து தருகிறார்கள். இந்த பாடலை கம்போஸ் செய்தவர் சச்சின் சுந்தர் எனும் இளம் இசையமைப்பாளர். 24 மணி நேரத்தில் இந்தப் பாடலுக்கான டியூன் போட பட்டதாகவும் உடனே அது ஓகே செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேட்டரி வண்டியை ரிலீவ் செய்த கோபிநாத்
நீயா நானா கோபிநாத் துப்புரவு தொழிலாளியிடம் உரையாடும் போது அவர்கள் உபயோகிக்கப்படும் பேட்டரி வாகனத்தை பற்றி தெரிந்து கொள்கிறார். முன்னும் பின்னும் செல்லக்கூடிய இந்த வாகனம் பேட்டரியால் ஓடும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தின் உருவத்தை மேற்கோள்காட்டி " இதை எனது மகள் பூச்சி வண்டி" என்று அழைப்பாள் என அவருடன் பகிர்ந்துள்ளார். அந்த வண்டியில் ஒரு ரவுண்ட் அடித்து முடித்து இது மிகவும் கடினமான பணி என்பதை நமக்கு உணர்த்தியுள்ளார். இந்த பேட்டரி வண்டிகள் சென்னை நகரம் முழுக்க குறைந்த பட்சம் 5,000 இருக்கின்றன. சென்னை சுத்தமாக இருக்க இந்த வாகனங்கள், இவைகளை இயக்கும் துப்புரவு தொழிலாளிகள் தான் மிக முக்கிய காரணமாக உள்ளனர். ஒரு நாள் முழுவதும் அவர்களோடு துப்புரவு பணியில் ஈடுபட்டு அதன் முடிவில் ஒரு நாள் வேலையே இவ்வளவு கலப்பாக இருக்கிறது என பதிவு செய்து நிறைய தண்ணீர் குடியுங்கள் என கோபிநாத் அவருக்கு அக்கறையாக சொல்லியுள்ளார். துப்புரவு தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் நமக்காக நமது சுற்றுப்புறத்தை தூய்மை செய்து கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் அவர்களுக்கு அவ்வப்போது தண்ணீரை கொடுங்கள் என்பதை உணர்த்துவது போல இது அமைந்துள்ளது. கோபிநாத்தின் இந்த முயற்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











