ஆண்– பெண் நட்பு காதலில்தான் முடியுமா?: 'நீயா நானாவில்' விவாதம்!
ஆண் - பெண் இடையே நட்பு மலர்வது என்பது அனைவருக்கும் வாய்த்து விடாது. அது காதலையும் விட மரியாதையானது என்று கூறுவார்கள். பள்ளி, கல்லூரிகளில் நிகழும் ஆண் - பெண் நட்பு ஒரு ரகம்.
அதுவே பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நட்பு வேறு ஒரு ரகம் கொஞ்சம் கூடுதல் மெச்சூரிட்டியானது. அந்த நட்பினை சமூகம் ஏற்றுக் கொள்வது இருக்கட்டும் வீடுகளில் அந்த நட்பை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றிதான் இந்த வார நீயா? நானா? நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு எப்போதுமே தங்களின் பிள்ளைகளின் மீது ஒரு கண் இருக்கத்தான் செய்யும். அதுவும் தங்களின் பெண் குழந்தைகளுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே டென்சன் அதிகமாகிவிடுகிறது. ஆனால் பெற்றோர்களே கூல் நாங்கள் அப்படி இல்லை என்கின்றனர் இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள்.

நட்பே வேண்டாமே
ஆண் - பெண் நட்பு என்று ஆரம்பித்தாலே கடைசியில் அது காதலில்தான் முடியும். நான்கு பேர் நான்கு விதமாக பேசுவார்கள் எனவே அந்த நட்பை ஆரம்பத்திலேயே கட் செய்து விடுவோம் என்கின்றனர் பெற்றோர்கள்.

நட்பு அவசியம்
ஆனால் இன்றைய காலநிலையில் ஆண் - பெண் நட்பு என்பது அவசியமானது. எங்களுக்கு தேவையான உதவிகளை செய்வது ஆண் நண்பர்கள்தான். படிப்பில் தொடங்கில் பலவிதங்களில் உதவிகரமாக இருக்கிறது என்று கூறினர் பெண் பிள்ளைகள்.

போன்ல பேசறாலே…
செல்போனில் மகள் பேசினாலே பெற்றோர்களுக்கு பி.பி எகிறிவிடுகிறது. அது யார் என்று குடைவதில் தொடங்கி கல்லூரி, கம்யூட்டர் கிளாஸ்களுக்கு வேவு பார்க்க ஆள் அனுப்புவது வரை செய்கின்றனர் பெற்றோர்கள். இரவு 10 மணிக்கு மேல் ஆண் நண்பர்களுடன் என்ன அநாவசியப் பேச்சு என்று கேட்டனர் சில பெற்றோர்கள்.

உளவு பார்ப்பது நியாயமா?
செல்போனில் அநாவசியமாக பேசுவது கிடையாது என்று கூறும் பிள்ளைகள், , எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் உளவு பார்ப்பது மனதைக் காயப்படுத்துகிறது என்றனர்.

காதலில் முடியும்
ஆண் - பெண் நட்பே இனக்கவர்ச்சிதான் அது காதலில்தான் முடியும் என்பது பெற்றோர்கள் வாதம். நல்ல நட்பு சில சமயம் காதலில் முடிய வாய்ப்பு உள்ளது என்று சில இளம் பெண்கள் ஒத்துக் கொண்டனர்.

நூற்றுக்கணக்கான நண்பர்கள்
என்னுடைய பதின் பருவத்தில் நான் நூற்றுக்கணக்கான ஆண்களுடன் நட்பு பாராட்டினேன் என்றார் பிரபல எழுத்தளர் வெண்ணிலா. அந்த நட்பினால் எண்ணங்கள் விசாலமடையும் என்று கூறினார். அந்தக் காலத்திலேயே தன்னுடைய பெற்றோர்கள் அந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தாக கூறினார்.

நட்பே வாழ்க்கைத்துணை
நண்பராக இருந்தவரே தனக்கு வாழ்க்கைத்துணைவராக வந்ததாக கூறிய வெண்ணிலா நல்ல நட்பு எது என்பதை பிரித்தறிய தெரியவேண்டும் என்றார். அதே சமயம் ஒரு தாயாக மூன்று பெண் பிள்ளைகளை பெற்ற தனக்கு இந்த காலத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது என்றும் கூறினார்.

நட்பு தவறில்லையே
இதேபோல் ஆண் - பெண் நட்பு என்பது ஆரோக்கியமானதுதான். அதில் தவறேதும் இல்லையே என்று மற்றொரு சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் அபிலாஷ் கூறினார். ஆண் - பெண் நட்பில் பாலியல் கொஞ்சம் இருந்தாலும், அது காதலாக மாறும், காமமாக மாறுவதும் அவரவர் கையில்தான் இருக்கிறது என்று முடித்தார்.

ஆண்பிள்ளைகள் பற்றி பேசுங்களேன்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணன்கள் சிலருக்கு பெண் நண்பிகள் இருக்கின்றனர். அவர்கள் தங்களின் தங்கைகளுக்கு ஆண் நண்பர்கள் இருக்கக் கூடாது என்கிற ரீதியில் பேசினார்கள். அது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. எனவே ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களை அழைத்து இதேபோல் கண்டிப்பாக அழைத்துப் பேசுங்களேன் கோபிநாத்.


Click it and Unblock the Notifications











