லிக்கர் மாபியாவும், லிக்கர் லாபியும்... 'குடிமகன்'களுக்கு தெரியுமா?

இது ஒவ்வொரு குடிமகன்களும் மது பாட்டில்களை கையில் பிடிக்கும் போது வாசித்து பார்ப்பதுதான்..... ஆனால் அதன் அர்த்தம் புரிந்தும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் குடித்து குடித்து குடல் வெந்து போகின்றனர் தமிழ்நாட்டு குடிமக்கள்.
டாஸ்மாக் கடைகளில் வாழ்க்கையைத் தொலைத்தவர்களைப் பற்றி இந்தவாரம் 'ரௌத்திரம் பழகு' நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது புதிய தலைமுறை.
காலையில் கடை திறக்கும் போதே காத்திருந்து கை நடுங்க அந்த மதுவை வாங்கி குடிக்கின்றனர் சிலர். பள்ளிக்கு போகும் பையோடு வந்து பாட்டில்களை வாங்கி குடிக்கின்றனர் இளைய தலைமுறையினர்.
விளையாட்டாய் ஆரம்பித்த பழக்கம் விபரீதமாகப் போய்விட்டதே என்று புலம்புகின்றனர் சிலர். இந்த மதுப்பழக்கத்தினால் எத்தனையோ குடும்பங்கள் நடுவீதியில் நிற்கின்றன.
மணமாகி 6 நாளில் குடித்து விட்டு வந்த கணவனை புதுப்பெண் திட்டியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. குடித்து குடித்து குடல் வெந்துப் போய் மரணத்தை தழுவிய கதையை கண்ணீரோடு பகிர்ந்து கொண்டார் ஒரு பெண். தகப்பன் மரணித்த செய்தி கூட அறியாமல் பிஞ்சுப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
குடிக்காதே என்று படித்து படித்து கூறியதையும் கேட்காமல் கடையில் படத்திற்கு மாலை போடும் படி வைத்துவிட்டானே தன் கணவன் என்று அழுது புழம்பினார் அந்தப் பெண்.
தமிழ்நாட்டில் எத்தனையோ தாய்மார்கள் தங்களின் குடிகாரக் கணவர்களோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். குடியினால் பணம் பாழாவதோடு மரணத்தை தழுவும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அரசுக்கு வருவாய் வருகிறது என்பதற்காக மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. ஆனால் அரசின் ஆதாரமாக இருக்கும் மக்கள் மண்ணாகிப் போகின்றனரே என்பதை இந்த அரசுகள் உணர மறுக்கின்றனரே என்று கேள்வி எழுப்பினர் சமூக ஆர்வலர்கள்.
24 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது என்பதற்காக 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடித்து தீர்க்கின்றனர் தமிழக ஆண்கள். இது வெட்கப்பட வேண்டிய விசயம் என்றார் காந்தீய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.

வெட்கப்பட வேண்டாமா?
புத்தாண்டுக்கு 200 கோடி ரூபாய்க்கு மது விற்பனை... பொங்கலுக்கு 450 கோடி ரூபாய்க்கு விற்பனை. மூன்று நாள் தொடர் விடுமுறையால் 200 கோடி ரூபாய் வரை வருமானம் போச்சே என்று புலம்புவதாக செய்திகள் வெளியாகின்றன. இது வெட்கப்பட வேண்டிய விசயம் என்று வேதனைப் பட்டார் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவி.

லிக்கர் லாபி தெரியுமா?
தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுக்கடைகளை மூட நினைப்பதில்லை. இதற்குக் காரணம் லிக்கர் மாஃபியாவும், லிக்கர் லாபியும்தான். சாராய சாம்ராஜ்யத்தில் நடக்கும் விசயங்களைப் பற்றி சாமான்ய குடிமகன்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்றார் தமிழருவி மணியன்.

ஓட்டுப்போட்டவர்களுக்கு பாட்டில்
பாட்டிலுக்கு வாக்குரிமையை விற்கும் அவலம் நம் நாட்டில் மட்டும்தான் நடக்கும். அரசுக்கு வருவாய் வருகிறதே என்பதற்காக மதுவை விற்பது நியாமற்ற செயல் என்று குமுறினர் சமூக ஆர்வலர்கள்..
அதே சமயம் மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டும் மக்கள் குடிப்பதை விட்டு விடுவார்களா? கள்ளத்தனமாக எதையாவது வாங்கிக் குடித்து உயிரிழப்பார்கள் என்று தெரிவித்தார் டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ்.

கருகும் மொட்டுக்கள்
குடியினால் பட்டமரம் வீழ்வது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் பள்ளிக்கு செல்லும் பிஞ்சுகளும்தானே பாழாகிப் போகிறது என்ற கேள்வியை முன்வைத்தனர் சமூக ஆர்வலர்கள். குடியும் ஒருவித மனநோய்தான் என்று அதிர்ச்சியூட்டினர் மனநல ஆலோசகர்கள். எனவே சிறுவயதிலேயே பழகும் குடிப்பழக்கம்தான் பெரியவர்கள் ஆன பின்னும் தொடர்கிறது. அதை நிறுத்தவேண்டும் என்று நினைத்தால் கூட கடையைப் பார்த்த உடன் ஓடிப்போய் குடிக்கத் தோன்றுகிறது என்று கூறினர் அவர்கள். எனவே சரியான கவுன்சிலிங் மூலம் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை தடுத்து நிறுத்த முடியும் என்றனர்.

எதுக்கு டார்கெட்
ஒரு மாதத்திற்கு இவ்வளவு விற்பனை செய்யவேண்டும். ஒரு ஆண்டிற்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டும் என்று டார்க்கெட் நிச்சயம் செய்வது என்பது கேவலமான விசயம். குடி மக்களை ‘குடி' மக்களாக மாற்றுவதற்கு அரசே டார்க்கெட் நிர்ணயம் செய்வது தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் நடக்காத விசயம். அதுவும் இங்குள்ள பார்கள் கழிவறையை விட கேவலமானதாக இருக்கிறது என்று ஆதங்கப்பட்டனர் சமூக ஆர்வலர்கள். இந்த டார்க்கெட்டினால் டாஸ்மாக் ஊழியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சமயத்தில் தற்காலிக பணிநீக்கத்திற்கு ஆளாக நேரிடுகிறது.
எனவே நாட்டு மக்களின் குடியைக் கெடுக்கும் இந்த மதுவை ஒழிப்பதன் மூலம்தான் ‘குடி'மக்களை சிறந்த மக்களாக மாற்றமுடியும் என்று தெரிவித்தனர் மதுவுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட மக்கள்.
அரசு இதை கவனிக்குமா?


Click it and Unblock the Notifications











