சரவணன் மீனாட்சி சீரியல் இப்போ வேட்டையன் மீனாட்சியாகி போச்சே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சரவணன் மீனாட்சி சீரியல் இப்போது பரபரப்பான திருப்பங்களுடன் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கதையின் திடீர் திருப்பமாக வில்லன் கதாப்பாத்திரம், ஹீரோயினை திருமணம் செய்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை என்றால் பாருங்களேன்.
விஜய் டிவியில் அழகர் ராம்குமார் இயக்கத்தில் சக்கைபோடு போட்டுவரும் சீரியல் சரவணன் மீனாட்சி.

செந்தில் ஸ்ரீஜா கல்யாணம்
முதல் ரவுண்ட்டில் சரவணன் மீனாட்சியாக செந்தில் மற்றும் ஸ்ரீஜா நடித்தனர். காதல் காட்சிகளில் நெருக்கம் காண்பித்த அவர்கள், உண்மையிலேயே காதல் வசப்பட்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இர்பான்
இந்நிலையில் இரண்டாம் தலைமுறை, சரவணன் மீனாட்சியாக, இர்பான் மற்றும் ரக்ஷிதா ஆகியோர் நடிப்பை தொடங்கினர். ஆனால் இர்பான் திரைப்பட ஹீரோவாகிவிட்டதால் மனிதர் வெள்ளித்திரை சூட்டிங்குகளில் படுபிசி. எனவே சீரியலின் முக்கிய கட்டத்தில், இர்பானுக்கு பதிலாக பிரேம்குமார் ஹீரோவாக்கப்பட்டார்.

பிரேம்குமாருடன் டூயட்
இர்பான் கதாப்பாத்திரத்தில் பிரேம்குமாரை பொருத்திப்பார்க்க ரசிக சிகாமணிகள் ரொம்பவே கஷ்டப்பட்டனர். இப்போதுதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு பார்க்க ஆரம்பித்தனர். பிரேம்குமாரும் முடிந்த அளவுக்கு ரக்ஷிதாவுடன் நெருக்கம் காட்டி கிறங்கடித்து வந்தார்.

வில்லன் விஸ்வரூபம்
இந்தநிலையில்தான், கதையின் முக்கிய கதாப்பாத்திரமாக வேட்டையன் விஸ்வரூபம் எடுத்தார். வேட்டையன் பாத்திரம், மீனாட்சியின் அத்தை மகனாக காண்பிக்கப்பட்டிருந்தது. மீனாட்சியை திருமணம் செய்தே தீருவேன் என்று வேட்டையன் சுற்றித் திரிந்ததால், கதையில் சுவாரசியம் ஏற்பட்டது.

வேட்டையன் பிளான்
மீனாட்சியின் திருமணத்தை வேட்டையனுடன் ஃபிக்ஸ் செய்தார் மீனாட்சியின் தந்தை. இந்த திருமணத்தில் மீனாட்சியின் தாய், வேட்டையனின் தாய்க்கு கூட இஷ்டம் கிடையாது. ஆனால் லோக்கல் தாதா, மீனாட்சியை கல்யாணம் செய்யும் நபரை வெட்ட காத்திருந்ததால், பலியாடாக வந்துள்ளதாக ஒரு கட்டத்தில் வேட்டையன், மீனாட்சியின் தாயிடம் உண்மையை சொல்லிவிடுகிறார். சரவணன் திருமண மண்டபத்திற்கு வந்ததும் அவரை தாலிகட்டச் செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதாகவும் வாக்கு கொடுக்கிறார் வேட்டையன். வில்லனுக்குள் ஒரு ஈர மனதா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

போலீசிடம் சிக்கிய சரவணன்
ஆனால் திருமண தேதியன்று மண்டபத்திற்கு வர வேண்டிய சரவணனை, விசா பிரச்சினையில் போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டது. போலீசாரிடமிருந்து தப்பி சரவணன் ஓடி வருகிறார். எப்படியும் அவர்தான் மண்டபத்திற்குள் வந்து மீனாட்சியை கரம்பிடிப்பார் என்று பெட் கட்டிக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். ஆனால் நடந்ததோ வேறு.

வேட்டையன் பொண்டாட்டி மீனாட்சி
குறிப்பிட்ட நேரத்தை தாண்டியும் சரவணன் மண்டபம் பக்கம் வராத நிலையில், மீனாட்சி கழுத்தில் வேட்டையன் தாலியை கட்டிவிட்டார். இப்போது கதை மவுனராகம் மோகன்-ரேவதி போல மாறிவிட்டது. இப்பவும்கூட சரவணன் வந்தால் அனுப்பி வைக்க தயார் என்று மீனாட்சியிடம் உறுதியளித்துள்ளார் வேட்டையனின் தாய். நல்லது செய்யப்போய் கெட்ட பெயரை பெற்றுள்ளார் வேட்டையன். தாய், மனைவி இருவருமே வேட்டையனை அறுவருப்பாக பார்க்கின்றனர். ஆக.. வில்லன் வேட்டையன் இப்போ தியாகி வேட்டையனாக காட்சியளித்து தாய்க்குலங்களின் கண்களை கலங்கச் செய்து கொண்டுள்ளார்.

மவுன ராகம் பார்ட்-2
கதையின் பெயரை சரவணன் மீனாட்சி என்று வைத்து விட்டு வேட்டையனுக்கு மீனாட்சியை கரம்பிடித்து கொடுக்க இயக்குநருக்கு என்ன நிர்பந்தம் வந்ததோ தெரியவில்லை. சரவணனுடன் கல்யாணம் செய்தால் சீரியல் முடிந்துவிடும், அதற்கு பதிலாக வேட்டையனுடன் மவுனராகம் பாடச் செய்யலாம் என்று நினைத்துவிட்டார் போலும் இயக்குநர். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...?


Click it and Unblock the Notifications











