சன் பிக்சர்ஸில் சின்ன சலசலப்பு.. சிஓஓ பதவியிலிருந்து விலகிய செம்பியன் மீண்டும் பணியில்!
சென்னை: சன் பிக்சர்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் தலைமை முதன்மை அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த செம்பியன் சிவகுமார், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை அளித்த வாக்குறுதியை அடுத்து தன்னுடைய ராஜினாமாவை திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் பணியில் தொடர்வதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் படத்தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி வகிப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று பெரிய பட்ஜெட் திரைப்படங்களை மட்டுமே தயாரித்து வருகிறது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

படப்பிடிப்பு சிறப்பாக முடிவடைந்ததை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் கதாநாயகி அனு இம்மானுவேல், அந்த காலத்தில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படம் முடிக்கப்பட்ட நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சி.ஓ.ஓ செம்பியன் சிவகுமார் அந்த பதவியிலிருந்து திடீரென ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை சன் பிக்சர்ஸ் நிர்வாகத்திற்கு கொடுத்து விட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் சன் பிக்சர்ஸ் நிர்வாகம் தலைமையில் இருந்து செம்பியன் சிவகுமாரை அழைத்து விசாரித்துள்ளனர். அவரது குறைகளைக் கேட்ட பின்னர் அனைத்தும் சரி செய்யப்படும் என்று சமாதானப்படுத்தியுள்ளனர். இதையடுத்து தனது விலகல் கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு மீண்டும் சி.ஒ.ஒ பதவியில் தொடர்கிறாராம் செம்பியன் என்று சொல்கிறார்கள். செம்பியன் சிவகுமார் மறைந்த பிரபலமான தயாரிப்பாளர் கோவை செழியனின் மகனாவார்.
இந்த படத்திற்கு முந்தைய தயாரிப்பான இளைய தளபதி விஜய் நடித்த சர்க்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலாநிதி மாறனால் அதிகம் பாராட்டப்பட்டவர். செம்பியன் சிவகுமார் இப்பதவிக்கு வருவதற்கு முன்பாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சி.ஓ.ஓவாக இருந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.
அந்த தலைமை பொறுப்பை பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்தவர், பல்வேறு சட்ட பிரச்சனைகளால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அவரால் கவனிக்க முடியாத சூழ்நிலையில் செம்பியன் சிவகுமாரை நியமித்தனர் சன் நிர்வாகத்தினர். செம்பியன் சிவகுமார் சன் குழுமத்தின் வேறு சேனல்களான எஸ்.சி.வி, சூரியன் FM, சூர்யா டிவி போன்றவற்றை நிர்வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











