காதல் கணவரின் சப்போர்ட் எனக்கு இருக்கு…: சீரியல் நடிகை ரம்யா
சீரியல், சினிமா என பிஸியாக இருந்தாலும் படிப்பிலும் படு கெட்டி என்று நிரூபித்து வருகிறார் நடிகை ரம்யா. முத்தாரம் தொடரில் மாடர்ன் பெண்ணாக தொடங்கி இப்போது அப்பாவியாக நடிக்கும் ரம்யா, சரவணன் மீனாட்சியில் நேர் எதிர் கேரக்டர்.
எப்படி இவ்ளோ பிஸியிலும் படிப்புக்கு நேரம் கிடைக்கிறது என்று கேட்டால் எல்லாம் காதல் கணவரின் சப்போர்ட்தான் என்கிறார். மதுரை சீரியலில் தொடங்கிய பயணம் சரவணன் மீனாட்சி, முத்தாரம் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. எல்லாம் ரசிகர்களின் ஆதரவுதான் என்று கூறும் ரம்யாவிற்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் வரவே சீரியலுக்கு கொஞ்சம் பிரேக் விட்டிருக்கிறார்.
அவரது பிஸியான நேரத்திலும் நம்மிடையே தனது சின்னத்திரை, சினிமா பயணத்தை பகிர்ந்து கொண்டார் படியுங்களேன்.

நான் சென்னை பெண்தான்
பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தேனாம்பேட்டையிலுள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் பி.ஏ. படித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தேன். ''2005-ல விஜய் டிவி-யில 'இது ஒரு காதல் கதை' சீரியல்தான் சின்னத்திரை அறிமுகம். அந்த தொடர்ல பாவாடை - தாவணியில், கிராமத்துப் பொண்ணா நடிச்சேன். குறும்புத்தனமான அந்த நடிப்பு எல்லோராலும் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அப்போது விருப்பமில்லை.

மதுரைதான்
"காதல் கதை' சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் நிறைய வாய்ப்புகள் வந்தன. "நிம்மதி', "கௌரவம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தேன். அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டது. "மதுரை' சீரியலில் தண்டல் தாமரை என்ற சுறுசுறுப்பான கிராமத்து பெண்ணாக நடித்தேன். அதுதான் எனக்கு பெரிய வரவேற்பு கொடுத்த சீரியல்

சௌந்தர்யா ஹிட்
சரவணன், மீனாட்சி சீரியலில் தமிழ், சௌந்தர்யா கேரக்டர்களும் ஹிட். ஆனா, இப்போ கதைப்படி ஒரு சின்ன பிரேக். சௌந்தர்யா லண்டன் போறேன், தமிழை பத்திரமா பாத்துக்கங்க என்று கூறிவிட்டு சிரித்தார்.

நிறைய ரசிகைகள் எனக்கு
சன் டிவியில் 'மகாபாரதம்', 'முத்தாரம்' சீரியல்களிலும் நல்ல பேர் கிடைச்சிருக்கு. குட்டீஸ் முதல் பெரியவங்க வரை எனக்கு ரசிகைகள் இருக்காங்க. சீரியல்ல என் இயர் ரிங்க்ஸ், காஸ்ட்யூம்ஸுக்கு எல்லாம் நிறைய பெண்கள் ரசிகைகளா மாறிட்டாங்க.

காதல் கணவர்தான் காரணம்
''இளங்கலை சோஷியாலஜி முடிச்சு, இப்போ எம்.ஏ, பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சுட்டிருக்கேன். எல்லாத்துக்கும் காரணம் காதல் கணவர் சங்கர் சத்தியமூர்த்திதான். சங்கரோட அன்பும் புரிதலும்தான் படிப்பு, நடிப்பு, குடும்பம்னு எல்லாத்துலயும் என்னை பேலன்ஸ் பண்ண வைக்குது. அவர் போட்டோகிராபர். உறவினர் ஒருவர் மூலமா அவர் நட்பு கிடைச்சு, காதலர்களாகி, ரெண்டு வருஷத்துக்கு முன்ன திருமணம் முடிஞ்சுது. அவர் எனக்கு கிடைச்ச கிஃப்ட்!

பாலுமகேந்திரா படத்தில்
பாலுமகேந்திரா சார் படம் உட்பட ரெண்டு, மூணு படங்கள்ல நல்ல ரோல் கிடைச்சுருக்கு. அதனால சீரியலுக்கு இப்போதைக்கு சின்ன பிரேக். மறுபடியும் சீக்கிரம் கண்டிப்பா வருவேன்.

குடும்பப் பாங்கான கேரக்டர்கள்
சீரியலின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஆரோக்கியமாக இருக்கிறது. சினிமாவைப் பொறுத்த வரை புடவை மட்டுமே கட்டி நடிக்கும் குடும்பப் பாங்கான கேரக்டர்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன்.
‘தடையறத்தாக்க' திரைப்படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரமாக அமைந்தது அதனால் ஈடுபாட்டுடன் நடித்தேன். அதேபோல் இப்போது கிடைத்துள்ள கேரக்டர்களும் நல்ல கதாபாத்திரங்கள்தான் என்று கூறி சிரித்தார் ரம்யா. மகிழ்ச்சியோடு நாமும் விடைபெற்றோம்.


Click it and Unblock the Notifications











