பல ஆண்டு காத்திருப்பு.. தேசிய விருதை பெற்ற ஷாருக்கான்.. 12th ஃபெயில் நடிகருக்கு தேசிய விருது!
டெல்லி: டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இந்த விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை 'ஜவான்' படத்திற்காக ஷாருக்கானும், '12th ஃபெயில்' படத்திற்காக விக்ராந்த் மாஸ்ஸியும் பகிர்ந்து கொண்டனர். திருமதி சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ராணி முகர்ஜி சிறந்த நடிகை விருதைப் பெற்றார்.
35 ஆண்டு கனவு: நடிகர் ஷாருக்கான் கருப்பு நிற பந்த்கலா உடை அணிந்து, கண்கவர் சன்கிளாஸுடன் மேடை ஏறினார். காதில் அவர் அணிந்திருந்த இயர் கஃப் அவரை கூடுதலாக அழகாக காட்டியது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து,பல்லாயிரக்கான ரசிகர்களில் மனதில் இடம் பிடித்திருந்த ஷாருக்கான் முதன்முறையாக அட்லீ இயக்கிய 'ஜவான்' படத்திற்காக தேசிய விருதை பெற்றுள்ளார். அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படம், இந்தியாவில் நிலவும் வேலையின்மை, விவசாயிகள் தற்கொலைகள் போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை பேசும் திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, பிரியா மணி, விஜய்சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து, சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய இந்தி வெற்றிப் படங்களில் ஒன்றாக உள்ளது.

விருதை பெற்றார்: விருது வழங்கும் விழாவிற்கு, ராணி முகர்ஜி பழுப்பு நிற புடவை அணிந்து வந்திருந்தார். மெல்லிய மேக்கப், சிறிய பொட்டு, பொருத்தமான ஆபரணங்களை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தார். ஆஷிமா சிப்பர் இயக்கிய 'திருமதி சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே' படத்தில் நடித்ததற்காக ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. 2011ஆம் ஆண்டு நார்வே அதிகாரிகள் இந்தியக் குடியேற்றத் தம்பதியான சாகரிகா சக்ரவர்த்தி மற்றும் அனூப் பட்டாச்சார்யாவின் குழந்தைகளைப் பிரித்த உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு தாயின் வலிமையையும், உறுதியையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய ராணி முகர்ஜியின் நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

12th Fail: விது வினோத் சோப்ரா இயக்கிய '12th ஃபெயில்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக
விக்ராந்த் மாஸ்ஸி சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இந்த நிகழ்விற்கு அவர், வெள்ளை நிற பந்த்கலா அணிந்து வந்திருந்தார். இப்படம் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மாவின் வாழ்க்கை கதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. விக்ராந்த் மாஸ்ஸி தனது அற்புதமான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தார். வெறும் ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.69.64 கோடி வசூலித்து பெரும் வெற்றி பெற்றது. மேலும், இந்தி திரைப்படமான 'KATHAL' படத்தின் இயக்குநருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், அனிமல் திரைப்படம் சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. முதன் முறையாக தேசிய விருதை பெற்ற ஷாருக்கான், விக்ராந்த் மாஸ்ஸி, ராணி முகர்ஜி ஆகியோருக்கு இணையத்தில் அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமாவுக்கு அளித்த பங்களிப்பிற்காக நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகெப் பால்கே விருது வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











