சன் டிவியில் திங்கள் இரவு முதல் நாகினி... இச்சாதாரி நாக கதை
சென்னை: சன் டிவியில் திங்கட்கிழமை இரவு முதல் நாகினி என்ற பாம்பு கதை சீரியலை ஒளிபரப்ப போகின்றனர். பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அந்த பயத்தை வைத்துதான் இப்போது காசு பார்க்கின்றனர். பேய் பற்றிய ஓட்டத்தினால் பேய் கதை படங்கள் எடுக்கப்பட்டன. டிவி சீரியல்களிலும் பேய்கள் உலா வந்தன.
இப்போது வட இந்திய டிவி சேனல்களில் பாம்புகள் அதுவும் அழகான பெண்கள் வடிவில் வந்து புஸ் புஸ் என்று நாக்கை நீட்டி அச்சுறுத்த அந்த சீரியல்களை அப்படியே தமிழ் டப்பிங் பேச வைத்து விட்டனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி நாகின் என்ற இந்தி தொடரை நாகராணி என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறது. இந்த தொடர் தனது உருவத்தை விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றக்கூடிய இச்சாதரி என்ற பெண் பாம்பின் கதையை அடிப்படையாகக் கொண்டது.
சன் டிவியிலும் இப்போது போட்டியாக நாகின் என்ற பாம்பு சீரியலை ஒளிபரப்ப உள்ளனர். இந்த கதையும் இச்சாதாரி நாக கதைதான். இந்த தொடரில் தமிழ் நடிகை சுதா சந்திரனும் நடித்துள்ளார். சன் டிவியின் இச்சாதாரி நாக கதையை தெரிந்து கொள்ளும் முன்னர், ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் நாகராணி கதையை தெரிந்து கொள்ளலாம்.

இச்சாதாரி நாகம்
இச்சாதாரி பாம்பு அம்ரிதா என்ற பெண்ணாக மாறி ருத்ராவின் குடும்பத்தினரை பழி வாங்குகிறது. இந்த குடும்பத்தினர் விலை உயர்ந்த நாகமணியை அபகரிப்பதற்காக அம்ரிதாவின் பெற்றோர்களான நாகலோகத்தின் அரசன் மற்றும் ராணியை கொலை செய்தனர்.
பாம்பு ராணி இறக்கும் போது தன்னை கொன்றவர்களை பழி தீர்க்கும் படியும் மற்றும் தனது பெற்றோர் மீண்டும் உயிர்பெற நாகமணியை திரும்ப பெறும்படியும் தனது மகள் அம்ரிதாவுக்கு உத்தரவிடுகிறார்.

அம்ரிதா நாகம்
தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த பாம்பு, மனித உருவெடுத்து, தனது பெற்றோரை கொலை செய்த ருத்ராவின் குடும்பத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்கிறது. ஒரு மனைவியாக கணவர் அர்ஜுன் மீது பாசம் செலுத்துவதா அல்லது பழிவாங்குவதா என இருதலைக் கொள்ளி எறும்பு போல தவிக்கிறது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு அம்ரிதா கருவுறுகிறாள்.

தொடரும் மரணம்
அம்ரிதா மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் அவளது கணவர் அர்ஜுன் இறக்கிறார். அர்ஜுனின் பாட்டி திரிவேணி தவிர குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இறக்கின்றனர்.

இரட்டை குழந்தைகள்
அம்ரிதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. திரிவேணியும், சூர்யாவும் வந்து உயிரைக் கொல்லும் விஷம் வாயிலாக அம்ரிதாவை கொல்கின்றனர். எனினும் மற்றொரு இச்சாதரி பாம்பு கனிஷ்கா தனது குழந்தைகளுடன் வாழ விரும்பிய அம்ரிதாவுக்கு உதவுகிறது.

ஆவியாக மாறும் அம்ரிதா
குழந்தைகளை கவனிப்பதற்காக ஆவியாக மாறும்படி அம்ரிதாவுக்கு கனிஷ்கா ஆலோசனை வழங்குகிறது. இக்குழந்தைகள் வளர்ந்ததும் தாய் அம்ரிதாவைப் போன்று அப்படியே தோற்றமளிக்கின்றனர்.

பாம்பும் மந்திரவாதியும்
ஒரு குழந்தை திரிவேணியின் அரவணைப்பில் வளர்கிறது. திரிவேணி அந்த குழந்தையை நல்ல முறையில் நடத்த வில்லை. மற்றொரு குழந்தையை ஒரு கிராமத்து பெண் வளர்த்து வருகிறாள். அவளும் உடனே இறந்து விடுகிறாள். திரிவேணி மந்திரவாதி பைரவ்நாத்தை அணுகி அம்ரிதாவை உலகுக்கு கொண்டுவர முயற்சித்து, அதன் வாயிலாக அவளை முற்றிலும் அழிக்க முயற்சி செய்கிறாள்.

சன் டிவி நாகினி
சன்டிவியிலும் இதேபோல ஒரு இச்சாதாரி நாக கதைதான் சிவன்யா மற்றும் ஷேசா என்ற பாம்புகளை பற்றியது. இதுவும் நாகமணி களவு போன கதைதான். இந்த சீரியலைப் பற்றிய முன்னோட்டமே பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக உள்ளது. திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளனர்.

எந்த பாம்பு ஜெயிக்குமோ
ஜீ தமிழ் டிவியில் வரும் பாம்பும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கிறது. சன் டிவியில் வரும் நாகினி இச்சாதாரி பாம்பு பார்ப்பதற்கு பயங்கர அழகாக இருக்கிறது. இரண்டு கதைகளும் பிரம்மாண்டமாகவே உள்ளது. எந்த பாம்பு ஜெயிக்குமோ பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











