சூப்பர் சிங்கர் போட்டி... ரூ. 70 லட்சம் வீடு வென்ற கேரளாவின் ஆனந்த் அரவிந்தாக்ஷன்
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பட்டத்தை கேரளா இளைஞரான ஆனந்த் அரவிந்தாக்ஷன் வென்று ரூ. 70 லட்சம் மதிப்புள்ள வீட்டினை தட்டிச் சென்றார். தமிழகத்தைச் சேர்ந்த ஃபரிதா இரண்டாம் இடம் வென்று ரூ. 10 லட்சம் பரிசு பெற்றார். நடுவர்களின் அபிமானத்தை பெற்று அதிக அளவில் மதிப்பெண் வாங்கியும் மக்களின் வாக்கு கிடைக்கவில்லை என்பதால் மதுரையைச் சேர்ந்த இளைஞர் ராஜ கணபதிக்கு 3வது இடமே கிடைத்தது.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று, சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

ராஜ கணபதி, ஃபரிதா, சியாத் ஆகிய மூவரும் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தேர்வான நிலையில் ஆனந்தும், லட்சுமியும் வைல்கார்ட் ரவுண்ட் மூலம் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தனர்.
சென்னை டி.பி. ஜெயின் கல்லூரியில் நேற்று நடைபெற்ற இந்த போட்டி பற்றி சமூகவலைத்தளங்களிலும் சூப்பர் சிங்கரின் இறுதிச்சுற்று பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டது. . பரீதா, ஆனந்த், சியாத் ஆகிய போட்டியாளர்களுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஒருவழியாக நிகழ்ச்சி தொடங்கியது. இறுதிச்சுற்றில் போட்டியாளர்கள் பாடிய பாடல்களில் ராஜ கணபதி பாடிய 'ஆலுமா டோலுமா'பாடலுக்கு ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. விழா மேடைக்கே வந்து தனது பாராட்டினை தெரிவித்தார் உஷா உதுப்.
ஒருவழியாக 5 போட்டியாளர்களும் பாடி முடித்த பின்னர் ரிசல்ட் அறிவிக்க இரண்டு மணிநேரம் ஆனது. அதுவரை சித் ஸ்ரீராம் உள்ளிட்ட பின்னணி பாடகர்களை மேடையேற்றியது விஜய் டிவி.
இவர்களும் ஒருவழியாக பாடி முடிக்க, ரிசல்ட் அறிவிக்கும் நேரம் வந்தது. லட்சுமியும், சியாத்தும் 4 மற்றும் 5ம் இடத்தை பெற்று 3 லட்சம் மதிப்புள்ள செக் பரிசாக வென்றனர்.
தொகுப்பாளினி பாவனா சற்றே குழப்பமான முடிவினையே அறிவித்தார் நடுவர்கள் அளித்த 746 மதிப்பெண்களைப் பெற்று ராஜகணபதி முதலிடம் பிடித்தாக கூறினார். அதே நேரத்தில் வாக்குகள் அடிப்படையில் வித்தியாசம் இருப்பதாக கூறினார். முதலிடம் என்று கூறிய உடனேயே ராஜ கணபதியின் பெற்றோர்களும், ரசிகர்களும் உற்சாக ஆரவாரம் செய்தனர். ஆனால் ஒட்டு மொத்தமாக மூன்றாம் இடம் என்று கூறி பரிசு அளிக்கப்பட்டது. இதனால் அவரது பெற்றோர்கள் மட்டுமல்லாது தமிழக ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.
ஃபரிதாவும், ஆனந்தும் மேடையில் நிற்க இவர்களில் யாருக்கு முதல்பரிசு என்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்தனர். பலவித பில்டப்புகளுக்கு பிறகு வெற்றி பெற்றவர் ஆனந்த் என்று அறிவித்தார் பாவனா.
70 லட்சம் மதிப்பிலான வீட்டிற்கான சாவியை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அளித்தார். இரண்டாம் இடம் பிடித்த ஃபரிதாவிற்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள செக் பரிசளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஃபரிதாவின் குழந்தைகளின் சோகம் ததும்பிய முகத்தை ஏன் திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள் என்று தெரியவில்லை.
போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆனந்த், ஃபரிதாவிற்கு தான் இசையமைக்கும் படங்களில் பாட வாய்ப்பு தருவதாக கூறியுள்ளாராம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
விடிய விடிய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் ரிசல்ட்டையே அறிவித்தனர். சமூக வலைத்தளங்களில் நள்ளிரவு நேரத்திலும் டுவிட்டரில் சூப்பர் சிங்கர் விவாதிக்கப்பட்டதால் டிரெண்ட் ஆனது.


Click it and Unblock the Notifications











