கதாநாயகியை கோமாவில் படுக்கவை... நாயகன் படத்துக்கு மாலை போடு… ப்ரசர் ஏற்றும் டிவி சீரியல்கள்!

By Mayura Akilan

மலருக்கு என்ன ஆச்சோ தெரியலையே... நிறை மாச கர்ப்பிணி வேற இப்படி தலையில அடிபட்டு ஆக்சிடென்ட் ஆயிருச்சே.... என்று போனவாரம் நாதஸ்வரம் சீரியல் பார்த்த இல்லத்தரசிகளின் கவலை. இந்த வாரமோ கோபிக்காகவும், பிரசாத்தை தேடி அலையும் மகாவிற்காகவும் உச்சு கொட்டுகின்றனர்...

பூமிகாவிற்காகவும், அர்ச்சனாவிற்காகவும் தினம் தினம் கவலைப்படுகின்றனர். வள்ளியின் கழுத்துல இப்படி அநியாயமா விக்கி தாலி கட்டிட்டானே அவ வாழ்க்கை என்ன ஆகுமோ என்று ஆதங்கப்பட்டு தங்களுக்கு பிளட் பிரசர் வர வைத்துக்கொள்கின்றனர் சில வயதான பாட்டிகள். காரணம் டிஆர்பி என்கிற மந்திர வார்த்தைதான். இந்த டிஆர்பிதான் ஒரு சீரியலின் தலையெழுத்தை தீர்மானிக்கிறது.

இன்றைய தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பெரும்பாலான சீரியல்களில் பெண்களை மையப்படுத்தியே கதைகள் எழுதப்படுகின்றன. ஒரு நல்லவள், ஒரு கெட்டவள், ஒரு தோழி என சுற்றி சுற்றி கதை பின்னப்படுகிறது.

அவள் மனைவியாகவோ, மாமியாராகவோ, நாத்தனாராகவோ, மருமகளாகவோ, அண்ணியாகவோ இருக்கலாம். ஆண் கதாபாத்திரங்கள் இந்த பெண்களுக்கு உதவக்கூடியவர்களாக வந்து செல்கின்றனர்.

கூட்டுக்குடும்பம்

கூட்டுக்குடும்பம்

கூட்டுக் குடும்பம் என்பதே சமூகத்தில் இன்று காலாவதியாகிவிட்ட போதும், சீரியலைப் பொறுத்தவரை அது பயனுள்ளதாகவே இருக்கிறது. பத்துப் பதினைந்து பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஏழெட்டு பேருக்கு கதையில் வேலையே இல்லையென்றாலும், பின்னால் புதிய பிரச்சினைகளை உருவாக்கி கதையை இழுப்பதற்கு அவர்கள் பயன்படுவார்கள். மாமியாரால் பிரச்சினை இல்லை என்றால் அண்ணி காயத்திரியால் பிரச்சினையை உருவாக்கு என்பதுதான் சீரியலின் தாரக மந்திரமாக இருக்கிறது. இதை பார்க்கும் சத்யாக்கள் கூட்டு குடும்பத்தில் வாழ நினைப்பார்கள்?

சீரியல் வில்லத்தனங்கள்

சீரியல் வில்லத்தனங்கள்

திருமணத்தை கெடு... இல்லையா கணவன் மனைவியை பிரி... கர்ப்பத்தைக் கலை... அதிலும் தப்பித்தால் பிறந்த குழந்தையை திருடு என ஒரே வில்லத்தன சிந்தனைகளாகவே சீரியல்கள் எடுக்கப்படுகின்றன. இத்தனையில் இருந்தும் அந்த நாயகி தட்டுத்தடுமாறி தப்பிக்கிறாள் என்பதுதான் கதையாக உள்ளது.

கள்ள உறவுகள்

கள்ள உறவுகள்

இது ஒருபுறம் இருக்க கள்ள உறவுகளும், இருதார திருமணங்களை ஆதரிக்கும் காட்சிகளும்தான் அதிகம் எடுக்கப்படுகின்றன. ஒரு கணவனுக்காக சண்டை போடும் இரு தோழிகள். மனைவியின் சகோதரியை அடைய நினைக்கும் ஆண் என உறவுமுறைகளை கேவலப்படுத்தும் கதைகளும் அரங்கேறுகின்றன. எனவேதான் இவற்றை பார்ப்பதை பெரும்பாலான இல்லத்தரசிகள் தவிர்க்கின்றனர்.

யாரையாவது கொல்லு

யாரையாவது கொல்லு

இப்படியும் சீரியல் போரடித்தால் யாரையாவது தற்கொலைக்கு தூண்டவேண்டும்... ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராட வேண்டும். ஏதாவது ஒரு பழிக்கு ஆளாகி நாயகி அல்லது நாயகன் கைதாக வேண்டும். சிறையில் அவர்களைக் கொல்ல ஏற்பாடு நடக்க வேண்டும்.

தினம் தினம் பிரசர்

தினம் தினம் பிரசர்

டிஆர்பி ரேட்டிங்குக்கு தகுந்த மாதிரிதான் கதையை நகர்த்தவே வேண்டும். எனவே கதை விவாதத்தில் துவங்கி கை வலிக்க வசனம் எழுதுகிறவர் வரைக்கும் டென்ஷனோ டென்ஷன்தான் தினந்தோறும். இதை பார்க்கிற நேயர்களுக்கும் டென்சன், ப்ரசர், சுகர் என எல்லா நோய்களும் இலவசமாக புகும்.

குஷ்புவின் கருத்து

குஷ்புவின் கருத்து

சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங் தான் வேதம். அதைநோக்கியே எல்லாம் இருக்கிறது. மக்கள் எதை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை டிஆர்பி கணக்கெடுக்கிறது. அவற்றையே அது செய்ய சொல்கிறது. மக்கள் ரசனையில் மாற்றம் வரும்போது நிகழ்ச்சிகளிலும் மாற்றம் வரும் என்கிறார் சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பு.

வெற்றியின் தாரக மந்திரம்

வெற்றியின் தாரக மந்திரம்

இந்த டிஆர்பிதான் ஒரு சீரியலின் வெற்றியை தீர்மானிக்கிறது. இதுவே ஒரு டிவி சேனலுக்கு வருமானத்தை அதிகரிக்கிறது என்கிறார் கலைஞர் டிவியின் பொது மேலாளர் ப்ளோரன்ட் பெரைரா. விளம்பரதாரர்களையும் திருப்திபடுத்தவேண்டிய கட்டாயத்தில் சீரியல் தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர் என்கிறார் அவர். அதற்காக பார்வையாளர்களை ஏமாற்ற முடியாது என்றும் தெரிவிக்கிறார்.

சன்டிவியில் 18 தொடர்கள்

சன்டிவியில் 18 தொடர்கள்

சன் டிவியில், வார நாட்களில் நாளொன்றுக்கு 18 தொடர்கள் ஒளிப்பரப்பாகின்றன. அதாவது 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளில் 9 மணி நேரங்களை இந்தக் கதைத் தொடர்களே ஆக்கிரமிக்கின்றன. காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், பிறகு மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் அரை மணி நேரத்துக்கு ஒரு தொடர் வீதம் ஒளிபரப்பாகின்றன. என்னதான் ஒரே மாதிரியான கதைகள் என்றாலும் சன்டிவிக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகம்.

பார்வையாளர் எண்ணிக்கை

பார்வையாளர் எண்ணிக்கை

ஆனால் விஜய், ஜெயா, ராஜ், ஜி தமிழ்... போன்ற சேனல்களில் சராசரியாக நாளொன்றுக்கு 9 சீரியல்களே ஒளிபரப்பாகின்றன. காரணம், 'டேம்' கணக்கின்படி இந்தக் காட்சி ஊடகங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவு. எனவே விளம்பர வருமானம் சன் டிவி அளவுக்கு இவற்றுக்கு வருவதில்லை.

தொடரை பாதியில் நிறுத்து

தொடரை பாதியில் நிறுத்து

'டேம்' தரும் வாராந்திர புள்ளிவிபரம் எக்குத்தப்பாக அமைந்து விட்டால், அடுத்து வரும் வாரங்களுக்கு விளம்பரங்கள் கிடைக்காது. சீரியலுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தால் முதலில் சன் டிவி கண்டிக்கும். அடுத்த வாரம் அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிடும். மூன்றாவது வாரம், பாதியிலேயே தொடரை நிறுத்தி விடும்.

டப்பிங் சீரியல்கள்

டப்பிங் சீரியல்கள்

இந்த வம்பே வேண்டாம் என்றுதான் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தி மற்றும் தெலுங்கில் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர்களை குறைந்த விலையில் வாங்கி தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. 'சிந்து பைரவி', 'சின்ன மருமகள்', 'மறுமணம்' போன்ற தொடர்கள் இப்படி இந்தியில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டவைதான்.

வரவேற்பும் அதிகம்

வரவேற்பும் அதிகம்

அழுது வடியும் கதாநாயகிகள் இல்லை... சாபம் விடும் மாமியார் இல்லை... குரூரமாக சிந்திக்கும் அண்ணிகள் இல்லை... மாறாக புதுப் புது காஸ்ட்யூம், கலர்புல்லான காட்சிகள் டப்பிங் சீரியல்களில் வருகின்றன. ஆழமான காதல் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது போல யதார்த்தமாக நாடகம் இருப்பதால் ரசிகர்களிடையே ஆதரவை உருவாக்கியுள்ளது.

விளம்பரங்களும் அதிகம்

விளம்பரங்களும் அதிகம்

விஜய். ஜீ என ஒரே தொலைக்காட்சி நிறுவனத்தில் வரும் தொடர் என்பதால் அதை பிராந்திய மொழியில் ஒளிபரப்பும்போது செலவு ஏற்படுவதில்லை. வேறு தொலைக்காட்சி சேனல் வாங்கினாலும் குறைந்த விலையில் தொடர்களின் மொழி மாற்று உரிமம் கிடைக்கிறது. இந்தியா முழுக்க ஒரே தொடர் பல மொழிகளில் வெளிவருவதால் விளம்பரம் தரும் நிறுவனங்கள் கூடுதலாக விளம்பரங்கள் கொடுக்கின்றன. இதனால்தான் சேனல்கள் சமீப காலமாக டப்பிங் தொடர்களை ஊக்கப்படுத்துகின்றன என்கின்றன சேனல் வட்டாரங்கள்.

நல்லதா எடுங்களேன்

நல்லதா எடுங்களேன்

இந்த டப்பிங் சீரியல்களினால் எங்களின் வருமானம் போய்விட்டது என்பது தமிழ் சின்னத்திரை நடிகர்கள், தொழிலாளர்களின் கவலை. எனவே ஒரே மாதிரியாக கதைகளை விடுத்து நல்ல சீரியல்களை எடுத்தால் யாரும் பார்க்கமாட்டேன் என்று சொல்லப்போவதில்லை. மருமகளை கொண்டாடும் மாமியார்... அம்மாவை போற்றும் மகன்கள்.. மனைவியை கொண்டாடும் கணவன் என ‘ப்ரியமானவள்' போல அத்திப்பூத்தார் போல ஒரு சில சீரியல்களும் சன்டிவியில் ஒளிபரப்பாகத்தான் செய்கிறது... அதையும் ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்கின்றனர் என ஒரேடியாக பார்வையாளர்கள் மேல் பழி போடாமல் நல்ல சீரியல்களை எடுங்களேன்... நாங்களும் ரசிக்கிறோம் என்பது டிவி ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X