சினிமாவைப் போல சீரியலிலும் சக்சஸ் ஆன தமிழ் நடிகைகள்
சினிமாவில் கொடி கட்டிப்பறந்த நடிகைகள் வாய்ப்பு கிடைக்காவிட்டால் கடை திறப்பு விழா, கலை நிகழ்ச்சிகள் என செட்டில் ஆகிவிடுவார். இதெல்லாம் சின்னத்திரையின் வருகைக்கு முன்பிருந்த நிலை. இப்போதோ சினிமா கைவிட்டாலும் சின்னத்திரையில் வெற்றி நாயகிகளாக வலம் வருகின்றனர் கதாநாயாகிகள்.
குட்டி பத்மினி தொடங்கி ஷமீதா வரை சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர்கள்தான். சில நாயகிகள் ஒரு தொடரோடு போர் அடித்துப் போய் வேண்டாம் என்று விட்டுவிடுவார்கள்.
சில நாயகிகள்தான் இருபது ஆண்டுகளாக கதாநாயகிகளாக சின்னத்திரையிலும் கோலோச்சிக் கொண்டிருப்பார்கள். அந்த வரிசையில் டிவி வழியாக இல்லத்தரசிகளின் இதயம் கவர்ந்த நாயகிகள் சிலரைப் பார்க்கலாம்.

சூர்ய புத்திரி குட்டி பத்மினி
மர்மத் தொடர் நாயகி என்று பெயரெடுத்த குட்டி பத்மினி சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து 20 ஆண்டுகளாக நடித்து வருகிறார். சன், ஜெயா, கலைஞர் என பிரபல சேனல்களில் குட்டி பத்மினியின் தொடர் ஒளிபரப்பாகியுள்ளது. அவரது தொடர் இன்றைக்கும் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்ற தொடராக உள்ளது.

சித்தியில் தொடங்கிய பயணம்
சினிமாவில் நடித்து வந்த ராதிகா குட்டி பத்மினி சீரியலில் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் தானாக ராடான் நிறுவனத்தை தொடங்கினார். சித்தியில் தொடங்கிய ராதிகாவின் பயணம் வாணி ராணி வரை 15 ஆண்டுகளாக இரவு 9.30 மணிக்கு அனைவரின் வீட்டிற்குள்ளும் வந்து செல்கிறார்.

தேவதையான தேவயானி
சினிமாவில் நடித்து வந்த தேவயானி திருமணமாகி செட்டில் ஆனபின்னர் கோலங்கள் தொடர் மூலம் சன் டிவியில் அறிமுகமானார். கோலங்கள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகாலம் ஒளிபரப்பான இந்த தொடர் தேவயானிக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ராஜ் டிவியில் கொடி முல்லை, சன் டிவியில் மீண்டும் முத்தாரம் தொடர் மூலம் பிஸியாகிவிட்டார்.

பரவசப்படுத்தும் குஷ்பு
சன் டிவியில் குங்குமம் தொடர் மூலம் அறிமுகமான குஷ்பு ஜெயாடிவியில் கல்கியாக வலம் வந்தார். ஜாக்பாட் நிகழ்ச்சி உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்போது கலைஞர் டிவியில் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற தொடரில் பரவசப்படுத்துகிறார்.

ரம்யா கிருஷ்ணன்
இவரும் குட்டி பத்மினியின் கலசம் தொடர் மூலம் அறிமுகமானவர்தான். பின்னர் தங்கம் என சன் டிவியில் வந்த ரம்யா கிருஷ்ணன் இப்போது ராஜ குமாரியாக வலம் வருகிறார்.

யுவராணி செட் ஆகலையே
திருமணமாகி செட்டில் ஆன யுவராணியை சின்னத்திரைக்கு அழைத்து வந்தார் ராதிகா. சித்தி தொடங்கி இன்றைக்கு தென்றல் வரை நடித்தாலும் கதாநாயகி அந்தஸ்து கிடைக்க வில்லை என்பதுதான் சோகம்.

பார்வதியான காயத்திரி
மெட்டி ஒலி தொடரில் 5 பெண்களில் ஒருவராக நடித்தாலும் கதாநாயகி அந்தஸ்து காயத்ரிக்குதான். நமச்சிவாய தொடரில் பார்வதியாக நடித்த காயத்திரி சிவனாக நடித்தவரையே திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இப்போது தங்கம், கன்னடத்தில் சீரியல் என பிஸியாகவே இருக்கிறார்.

ரோஜாவின் லக்
சினிமாவில் பிரபலமாக இருந்த ரோஜா சின்னத்திரைக்கு வந்தது நதி எங்கே போகிறது என்ற தொடரின் மூலம்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. அப்புறம் சீரியல் வேண்டாமென்று கேம் ஷோ பக்கம் ஒதுங்கிவிட்டார்.

ஆனந்தம் சுகன்யா
சினிமாவில் வாய்ப்பு குறைந்து போனதால் திருமணமாகி செட்டில் ஆன சுகன்யா, ஆனந்தம் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். இப்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் நடுவராக செட்டில் ஆகிவிட்டார்.

சிம்ரன் நேரம்
சினிமாவில் கனவு நாயகியாக வலம் வந்த நாயகி சிம்ரன், சீரியலில்தான் எண்டர் ஆனார். சீரியல் சரியாக செட் ஆகவில்லை என்பதால் அவரும் நைசாக ஜாக் பாட் பக்கம் ஒதுங்கிவிட்டார்.

மீனாவின் பார்வையில்
சினிமாவில் நாயகியாக ஜொலிப்பதற்கு முன்பே மீனாவிற்கு தாய்வீடு சின்னத்திரைதான். பின்னர் சினிமா வாய்ப்பு முடிந்து சில காலம் சின்னத்திரை சீரியலில் நடித்தார். திருமணம், குழந்தை என செட்டில் ஆகவே மீண்டும் நடுவராக வலம் வருகிறார்.

பானுப்பிரியாவின் ரவுண்ட்
புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர்தான் பானுப்பிரியா. அமெரிக்காவில் திருமணத்திற்குப் பின்னர் செட்டில் ஆனாலும் பிரச்சினை என்று மீண்டும் சீரியலுக்கு வந்தார். வாழ்க்கை தொடர் அவரை வாழ வைத்தது. மீண்டும் ஆஹா தொடர் மூலம் விஜய் டிவியில் நடித்தார்.

மயூரி சுதா சந்திரன்
விபத்து ஒன்றின் மூலம் கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கையாக நடித்த சுதாசந்திரன், இந்தி தொடர்களில் அதிகம் நடித்தார். அவரை தமிழ் தொலைக்காட்சிக்கு அழைத்து வந்தவர் குட்டி பத்மினி இப்போதும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிள்ளை நிலா ஷமிதா, திவ்ய பத்மினி
பாண்டவர் பூமி படத்தில் அறிமுகமானவர் ஷமீதா சரியான பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சின்னத்திரைக்கு வந்தார். இப்போது பல சீரியல்கள் அவர் கைகளில் உள்ளது. அதே போல 2011ல் வெளியான புலிவேஷம் படம் மூலம் தமிழுக்கு வந்த மலையாள நடிகை திவ்ய பத்மினி. அவரும் இப்போது சீரியல் பக்கம் ஒதுங்கிவிட்டார்.

ஸ்ருதிக்கு நல்ல வாய்ப்பு
கன்னட நடிகை ஸ்ருதி கல்கி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கார்த்திகைப் பெண்கள் தொடர் மூலம் சன் டிவியில் அறிமுகமாகியுள்ளார்.

வள்ளியான உமா
நடிகை சுமித்ராவின் மகள் உமா சினிமாவில் ஓராளவிற்கு நல்ல கதா பாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் திடீரென திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். இப்போது வள்ளி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார். அந்த தொடர் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.

இவர்களும் நடிக்கிறாங்க
இவங்களைத் தவிர விஜயலட்சுமி, ரேவதி, சுகாசினி, குயிலி போன்ற நடிகைகளும் சினிமாவில் இருந்து சின்னத்திரையில் நடிக்க வந்து இல்லத்தரசிகளிடம் வரவேற்பு பெற்றவர்கள்தான். குயிலி இப்போது அம்மா நடிகையாக சீரியல்களில் வலம் வருகிறார்.


Click it and Unblock the Notifications











