லேட்டஸ்ட் சீரியல் எல்லா வேஸ்ட்...பழைய சீரியலை போடுங்கப்பா...குழம்பும் டிவி சேனல்கள்
சென்னை : வீட்டில் இருப்பவர்கள் தான் சீரியல் பார்ப்பார்கள். குடும்ப தலைவிகள், பெண்கள், வயதானவர்கள் தான் சீரியல்கள் பார்ப்பார்கள் என்ற காலம் போய் தற்போது அனைத்து வயதினரும் டிவி சீரியல்கள் பார்க்கும் நிலை வந்து விட்டது.
குறிப்பாக கொரோனா, லாக்டவுனிற்கு பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சீரியல்கள் பார்க்க துவங்கி விட்டனர். இதனால் சீரியல் பார்க்கும் ஆடியன்ஸ் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
சீரியல் ஆடியன்ஸ் அதிகரித்துள்ளார்கள் என்பதற்காக சந்தோஷப்பட முடியாது. ஆடியன்ஸ் அதிகரித்ததன் விளைவு, சீரியல்கள் பற்றிய ட்ரோல்களும் தற்போது சோஷியல் மீடியாக்களில் அதிகரித்து விட்டது.

லாக்டவுனால் மாறிய நிலைமை
முன்பெல்லாம் புதுப்புது சீரியல்களை போட்டி போட்டி இயக்கி வந்தனர். ஆனால் கொரோனா காலத்தில் சினிமா, டிவி சீரியல் ஷுட்டிங் எதுவும் நடத்த முடியாமல் போனதால் ரசிகர்களை கவருவதற்காக, சீரியல் ரசிகர்களை இழந்து விடாமல் இருக்கவும் வேறு வழியில்லாமல் பழைய சீரியல்களை மீண்டும் டிவி.,களில் ஒளிபரப்பு துவங்கினர்.

அதிகரித்த பழைய சீரியல்கள்
இது நல்ல ஐடியாவாக இருக்கே என அனைத்து சேனல்களும் இதையே பின்பற்ற துவங்கினர். பல வருடங்களுக்கு வருடக் கணக்கில் ஓடிய சீரியல்களை மீண்டும் தேடி எடுத்து ஒளிபரப்ப துவங்கி விட்டனர். ஆரம்பத்தில் லாக்டவுனால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் வேறு வழியில்லாமல் பொழுது போக்க இவற்றை பார்க்க துவங்கினர். ஆனால் ஒரு கட்டத்தில் அனைவருக்கும் அதில் ஆர்வம் அதிகரித்து விட்டது.

புது சீரியல்கள் வேஸ்ட்
பழைய சீரியல்களுக்கு ஆடியன்ஸ் அதிகரித்ததால், லாக்டவுன் முடிந்த பிறகும் டிவி சேனல்கள் பழைய சீரியல்களை நிறுத்தாமல், நேரத்தை மட்டும் மாற்றி தொடர்ந்து ஒளிபரப்பின. இதன் விளைவு, பழைய சீரியல்களையும் தற்போதைய சீரியல்களையும் ஒப்பிட்டு பார்த்த ரசிகர்கள், இப்போதுள்ள சீரில்களுக்கு பழைய சீரியல்கள் எவ்வளவு மேல் என நினைத்து பழைய சீரியல்களை அதிகம் விரும்பிப் பார்க்க துவங்கினர்.

இதுக்கு தான் சீரியல் பார்க்குறாங்க
சித்தி, மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற பல பிரபலமான சீரியல்கள் தற்போதும் தொடர்ந்து பகல் நேரங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இப்போதுள்ள சீரியல்களில் சொதப்பல்கள், லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத விஷயங்கள், அவ்வளவு ஏன் மக்களை முட்டாளாக்கும் விஷயங்களை ஒதுக்க துவங்கியதுடன் சோஷியல் மீடியாவில் அதை கலாய்த்து, கழுவி ஊற்றவும் துவங்கி விட்டனர்.

குழப்பத்தில் டிவி சேனல்கள்
இன்னும் சரியாக சொல்ல போனால் தற்போது இளைய தலைமுறையினர் பலர் சீரியல்கள் பார்ப்பதே அதில் தினமும் நடக்கும் சொதப்பல்களை கிண்டல் செய்து ட்ரோல் செய்வதற்காக தான். அந்த அளவிற்கு இன்றைய சீரியல்களின் நிலை மோசமாகி விட்டது. லாக்டவுனால் வேறு வழியில்லாமல் பழைய சீரியல்களை ஒளிபரப்ப போய், இன்று நிலையை தலைகீழாக மாறி போய் விட்டது. மக்களின் மனநிலை திடீரென மாறியதால் இப்போது எந்த சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பு செய்வது என புரியாமல் டிவி சேனல்களும் குழம்பிப் போய் உள்ளன.


Click it and Unblock the Notifications











