உதிரிப்பூக்கள்… லட்சுமிபதியும் சக்தியும் இணைவார்களா?
உதிரிப்பூக்கள் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லட்சுமி பதிக்கு இறந்த போன மனைவி சக்தி உயிரோடு இருப்பதாக தெரியவருகிறது. அவளை தேடி கண்டுபிடித்து மீண்டும் இருவரும் இணைவார்களா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சிவநேசனின் ஆத்திரம்
உச்சபட்ச ஆத்திரத்தில் எடுக்கப்படும் எல்லா அவசர முடிவுகளுமே விபரீதத்துக்கு நாம் விரும்பிக் கொடுக்கிற விலையாகத்தான் அமையும். அநியாயத்தை தட்டிக் கேட்ட ஒரே காரணத்துக்காக தன் குடும்பத்தை பழி வாங்கி, மனைவியும் மகளும் சாக காரணமாக இருந்த தட்சிணாமூர்த்தியை பழிவாங்கும் நோக்கில், அவரது 3 குழந்தைகளை கடத்தி விடுகிறான் சிவநேசன்.
அந்தக் குழந்தைகளை தன் சொந்தக்குழந்தைகள் போல் வளர்க்கிறான் சிவநேசன். ஒருகட்டத்தில் சிவநேசன் தங்களின் உண்மையான அப்பா இல்லை என்ற உண்மை தெரிய வர, அடுத்த கட்ட உறவு, உரிமைப் போராட்டம்.

தட்சிணமூர்த்தியின் மனைவி
மழலைப்பருவத்தில் பறிகொடுத்த பிள்ளைகளை, வளர்ந்த நிலையில் பார்க்கும் தட்சிணாமூர்த்தியின் மனைவி மேற்கொள்ளும் பாசப்போராட்டம் தாய்ப்பாசத்தின் உச்சம்.
இதற்கிடையே இந்த மூன்று பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களுக்கான மணவாழ்க்கை எல்லாவற்றிலும் சிவநேசனின் பங்கு இருக்கவே செய்கிறது.

இறந்து போன சக்தி
லட்சுமிபதியை காதலித்து மனைவியாகி மூத்தமகள் ஷக்தி படும் துயரம் அவன் நெஞ்சில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் திடீரென்று விபத்தில் சிக்கி சக்தி உயிரிழந்துவிட்டதாக அனைவரும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

மேகாவின் வரவு
இந்த நேரத்தில் மனைவியுடன் சேர்ந்து எந்த மகள் இறந்து விட்டாள் என்று எண்ணினானோ, அந்த மகள் மேகா இப்போது வளர்ந்து பாசத்தோடு ‘அங்கிள்' என்று அன்புடன் அழைக்கிறாள். இவள்தான் தன் ரத்தத்தின் ரத்தம் என்பது அவனுக்கும் தெரியாது.

மகளை கண்டுபிடிப்பானா?
லட்சுமிபதிக்கு இரண்டாவது தாரமாக அவளை மணம் பேசியிருக்கும் நிலையில், மேகா தன் மகள் என்ற உண்மை சந்தோஷ சூறாவளியாய் அவனை தாக்குகிறது. சிவநேசனுக்கு மேகா தன் மகள் என்பது தெரிய வந்த மாதிரி மேகாவுக்கு சிவநேசன் தான் தன் அப்பா என்பது தெரிய வருமா?

இரண்டாவது திருமணம்
அடுத்தகட்டமாய் ஷக்தி உயிருடன் தானிருக்கிறான் என்பது சிவநேசனுக்குத் தெரிய வர, இந்த திருமண விஷயத்தில் அவன் எடுக்கும் முடிவு என்ன? ஷக்தியை மீண்டும் லட்சுமிபதியின் அம்மா அலமேலு மருமகளாக ஏற்றுக் கொள்வாளா?

நிலாவின் திட்டம்
ஷக்தியின் தங்கை நிலாவின் வாழ்வில் கணவன் என்ற பெயரில் புயல் ஏற்படுத்திய ‘பெண்கள் கடத்தல் புகழ்' சத்யா தண்டிக்கப்படுவானா? பேய் பிடித்தது போல வேஷம் போட்ட நிலா இனி தன்னுடைய கணவன் குற்றவாளி என்று தெரிந்து தண்டனை பெற்றுத் தருவாளா?

மனைவி குழந்தைகள்
தட்சிணாமூர்த்தியின் முதல் மனைவி உயிரிழந்து விட்டதாக நம்பிய நிலையில் அவளும் உயிருடன் இருக்கிறாள். எதிர்பாராத சந்தர்ப்பத்தில் மனது மகள் சக்தியை சந்திக்கிறாள்.
பணமும் கோபமும் ஒருசேர அமையப் பெற்ற தட்சிணாமூர்த்தி இனி என்னாவார்?

பரபரப்பான கிளைமாக்ஸ்
இதுவரை 470 எபிசோடுகளை எட்டியுள்ள தொடர் கிளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது. உதிரிப்பூக்களாய் சிதறிய குடும்பம் மீண்டும் மாலையாய் சேருமா? இத்தனை கேள்விகளுக்கும் அடுத்தடுத்த எபிசோடுகளில் பரபரப்பான பதில்கள் கிடைக்கும் என்கிறார், தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தன். தயாரிப்பு: ஹோம் மீடியா மூவிமேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார்.


Click it and Unblock the Notifications











