'பிள்ளைகள் மீது சத்தியம் செய்கிறேன்.. நந்தினி என்கதை..' - சுந்தர் சிக்கு வேல் முருகன் சவால்!
நந்தினி மெகா தொடரின் கதைப் பஞ்சாயத்து அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டது. அதாவது கோர்ட், வழக்கு என்ற நிலைக்கு.
"நந்தினி மெகா தொடரின் கதை என்னுடையது... பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து கதையை என்னிடமிருந்து வாங்கிய சுந்தர் சி, அதற்கு பலனாக ஒன்றுமே தராமல் ஏமாற்றிவிட்டார்," என்று கூறியிருந்த வேல் முருகன், தன் மனைவி, பிள்ளைகள் சத்தியம் அடித்து தான் சொல்வது உண்மை என்று கூறியிருந்தார்.

இந்த செய்தியை ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவாக வெளியிட்டது. அடுத்த நாளை வேல் முருகனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டாராம் சுந்தர் சி. 'வேல் முருகன் சொல்வதில் உண்மையில்லை. இப்படி ஒரு பேட்டி கொடுத்ததற்கு மான நஷ்ட தொகையாக ரூ 50 லட்சத்தை வேல் முருகன் தரவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்துப் பேசிய வேல் முருகன், "என்னிடம் கதையைப் பறித்துக் கொண்டு, அதற்கு பதிலாக ஒன்றுமே தராமல் ஏமாற்றியவர் சுந்தர் சி. உண்மையை வெளியிட்டதற்காக என்னிடம் ரூ 50 லட்சம் கேட்கிறார். சுந்தர் சி பெரிய டைரக்டர். அவர் மதிப்பு வெறும் 50 லட்சம்தானா?
சுந்தர் சார், பொய் சொல்லும் நீங்களே 50 லட்சம் கேட்டால், கதைக்கு சொந்தக்காரனான நான் ஒரு கோடி கேட்கலாம் இல்லையா? உங்களுக்கு உண்மை தெரியும். அதனால்தான் வெறும் 50 லட்சத்தோடு நின்றுவிட்டீர்கள்.

உங்களுக்கும் இரண்டு பிள்ளைகள், அம்மா இருக்கிறார். எனக்கும் இரண்டு பிள்ளைகள், அம்மா உள்ளார். உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், இவர்களை அழைத்துக் கொண்டு பழனி முருகன் கோயிலில் வந்து தலையில் அடித்து செய்யுங்கள். நானும் செய்கிறேன். தயாரா சுந்தர் சார்...?
இப்போதும் சொல்கிறேன்... நந்தினி என் கதை. சுந்தர் சி என்னை ஏமாற்றிவிட்டார்," என்றார்.


Click it and Unblock the Notifications











