அன்பிருக்கும் இடத்தில் சத்தம் இருக்கும்… நீயா? நானாவில் சூடான விவாதம்
மனிதர்களின் ஒலி அற்புதமானது. தங்களில் தேவைகளை பாஷையாக வெளிப்படுத்துவார்கள். சத்தம் கூட சில இடங்களில் சங்கீதமாக ஒலிக்கும். ஆனால் சின்னச் சின்ன சத்தத்தைக்கூட ஏற்றுக் கொள்ள மனமில்லாதவர்களுக்கு அது கூச்சலாக இருக்கும்.
தமிழர்கள் பேசாவிட்டால் செத்துப் போய்விடுவார்கள் என்பார்கள். தமிழர்களின் வாழ்க்கையே கொண்டாட்டமானது. அதே சமயம் சிலர் அமைதியான வாழ்க்கையை நோக்கிப் போகின்றனர்.
இந்த வாரம் நீயா நானாவில் அமைதியை விரும்புவர்களுக்கும், சத்தத்தை நேசிப்பவர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது. எந்த சத்தம் தங்களுக்கு சந்தோசத்தை தருகிறது என்று ஒரு தரப்பினரும், எந்த சத்தம் தங்களுக்கு எரிச்சலைத் தருகிறது என்று மற்றொரு தரப்பினரும் கூறினர்.

கோவில் திருவிழா
கோவில் திருவிழாவில் ரேடியோ சத்தம் தலைவலிக்கிறது என்று அமைதியை விரும்புபவர்கள் கூறினர். அதே சமயம் அது உணர்வு ரீதியானது, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அலாதியாக சுகம் என்று கூறினர் மற்றொரு தரப்பினர்.

என்னென்ன சத்தங்கள்
அதிகாலை பறவையின் ஒலி, பேருந்து நிலையத்தில் கடலை வண்டிக்காரன் எழுப்பும் சத்தம், சாலையோர கடைகளில் கொத்து புரோட்டா சத்தம், குத்துப்பாட்டு இசை, பேருந்தில் போடும் தாளம் என பலதரப்பட்ட சத்தங்களை ரசிப்பதாக கூறினர் சத்தத்தை சங்கீதமாக நினைப்பவர்கள்.

உடல் நலத்திற்கு கேடு
ஆனால் இதுப்போன்ற சத்தங்கள் தங்களின் வாழ்க்கைச் சூழலைப் பாதிப்பதாக கூறினர் அமைதி விரும்பிகள். மூளைக்கு கூட ரெஸ்ட் இருக்கு காதுக்கு ரெஸ்ட் இல்லை என்றார் ஒருவர்.

பைத்தியம் பிடிக்கும்
சத்தத்தோடு வாழ்ந்து சந்தோசமாக பேசும் ஒரு பெண், தன்னை தனியறையில் விட்டால் தனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று கூறினார். அந்த அளவிற்கு அவர் மனிதர்களின் சத்தத்தை நேசிக்கிறார் என்று உணர முடிந்தது.

தனித் தீவுகள்
சத்தத்தினால் பிரச்சினை இல்லை. அமைதியாக இருப்பவர்கள்தான் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சத்தம் போட்டு பேசுபவர்களுக்கு மன அழுத்தம் வருவதில்லை. பைத்தியம் பிடிப்பதில்லை என்றார் மோகன். தனக்குள்ளே தீவு போல ஒடுங்கிப் போனவர்கள்தான் அமைதியை விரும்புகின்றனர் என்றும் கூறினார்.

இயல்புக்கு மாறானவர்கள்
அமைதியாக இருப்பது தவறில்லை ஆனால் இயல்புக்கு மாறாக அமைதியாக இருப்பவர்களைப் போல நடிக்கக்கூடாது. தமிழர்களின் பாஷை சத்தம். அமைதியாக இருப்பது, தனிமையில் இருப்பதை தமிழர்கள் விரும்புவதில்லை என்கின்றனர்.

தனிமை இனிமையானது
ஏகாந்தம் இனிது. தனித்து இருத்தல், வெறுத்து இருப்பதில். தனித்திரு என்று வள்ளலார் கூறுகிறார். எனவே அமைதியும், தனிமையும் அலாதியான சுகம் என்றார் அமைதி விரும்பி. சத்தம் என்பது நெருக்கடியானது. அதனால் அமைதியாக இருக்க மனம் விரும்புகிறது என்றனர்.

தனிமைப் பட்டுவிடுவோமா?
அமைதியை நெருங்கும் போது தனிமைப் பட்டுவிடுவோமோ என்ற பயம் ஏற்படுகிறது. அமைதியை நெருங்குவதற்கு பயமாக இருக்கிறது.சின்ன சோகம் வந்தால் கூட பெரிய விசயமாக தோன்றுகிறது. பேய் பங்காளவுக்குள் இருப்பது போல தோன்றுகிறது என்றனர்.
அமைதியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் சரி சத்தமாகத்தான் அதைத் தெரிவிக்கின்றனர்.

மனிதர்களின் சத்தம்
மனஅமைதி என்பது வாழ்க்கையின் முன்னேற்றத்தை முடக்கிவிடுகிறது என்று பயப்படுகின்றனர்.அமைதியான சூழலில் வாழ்பவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஏன் என்ற கேள்விக்கு அவர்கள் போலியாக வாழ்கின்றனர் என்றார் சன்சென் இதே சத்தமான வட சென்னை வாழ்க்கை வெளிப்படையானது. ஒரு உறவு இருக்கும் என்றார்.

அடிமைப்பட்டு கிடக்கும் இடங்கள்
அமைதி என்பது மனிதர்களின் வாழ்க்கையினை மூழ்கடித்து விடக்கூடாது. மரணத்தை நோக்கி மனித இனத்தை நகர்த்து கிறது. நாம் எங்கெல்லாம் அடிமைப் பட்டு கிடக்கிறோமே அங்கே அமைதியாக இருப்பதைப் போல நடிக்கிறோம். எங்கே அதிகாரம் இருக்கிறதோ அங்கே குரலை தாழ்த்திக் கொள்கிறோம்

வாழ்க்கைக்கு அர்த்தம்
மனிதர்கள் வாழும் இடத்தில் மக்களின் ஓசையோடு வாழும் சமூகம் நல்லது. அதேசமயம் இயந்திரங்களின் சத்தோடு வாழ்வது ஆபத்து. மனிதர்கள் பேச ஆரம்பித்த பின்னர்தான் அர்த்தம் ஏற்பட்டது.

அன்போடு தொடர்புடையது
சத்தமாக பேசுகிறவன் நாகரீகமற்றவன் என்று கூறப்படுகிறது. அன்பிருக்கும் இடத்தில் சத்தம் இருக்கும். நம்முடைய வாழ்க்கை முறை ஒலியோடு தொடர்புடையது அதேசமயம் அதீத சத்தம் உடலுக்கும் ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ளத்தான் வேண்டும் என்று நிகழ்ச்சியை நிறைவு செய்தார் கோபிநாத்.


Click it and Unblock the Notifications











