Bigg Boss 9 - கொஞ்சம் சாப்பிடுடா.. விஜே பார்வதியை உருகி உருகி கவனிக்கும் வாட்டர் மெலன் ஸ்டார்.. என்ன பாசம்?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. இயக்குநர் பிரவீன் காந்தி முதல் ஆளாக எவிக்ட் ஆகியிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க இந்த சீசனில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும், விஜே பார்வதியும் அண்ணன், தங்கையாக பழக ஆரம்பித்திருக்கிறார்கள். அது ரசிகர்களிடையே ட்ரோல் மெட்டீரியலாகத்தான் மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் அண்மையி தொடங்கியது. இந்த சீசனில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அரோரா, எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா, கானா வினோத், வியானா, பிரவீன், சுபிக்ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சோஷியல் மீடியாக்களில் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எவிக்ட் ஆன பிரவீன் காந்தி: சீசன் ஆரம்பித்ததிலிருந்தே கன்டெண்ட்டுகளுக்கு பஞ்சம் இல்லை. போட்டியாளர் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு போட்டியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்கு முயன்று வருகிறார்கள். சூழல் இப்படி இருக்க இந்த சீசனில் இயக்குநர் பிரவீன் காந்தி முதல் ஆளாக எவிக்ட் ஆகியிருக்கிறார். வீட்டை விட்டு வெளியேறும்போது, பிக்பாஸ் 9ல் இல்லையென்றாலும் பிக்பாஸ் 100ல் கலந்துகொள்வேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இதற்கிடையே நந்தினி சுய விருப்பத்தின் பேரில் வீட்டிலிருந்து வெளியேறினார்.

திவாகர், பார்வதி பாசம்: இது ஒருபக்கம் இருக்க வீட்டுக்குள் சென்றிருக்கும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும், விஜே பார்வதியும் ரொம்பவே பாசமாக பழகிவருகிறார்கள். இருவரில் யாருக்கு பிரச்னை என்றாலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் பேசிவருகிறார்கள். அவர்களின் இந்த நடவடிக்கை சக ஹவுஸ் மேட்ஸிடம் விமர்சனத்தைத்தான் சந்தித்திருக்கிறது. இருப்பினும் அவர்கள் அதை பற்றியெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை.
கண்டித்த விஜய் சேதுபதி: வார இறுதியில் போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்தித்தபோதுகூட திவாகரும் பார்வதியும் அருகருகேதான் அமர்ந்துகொண்டிருந்தார்கள். மேலும் மற்றவர்கள் பேசியபோது அவர்கள் கொடுத்த ரியாக்ஷன்களை கவனித்த சேது, கண்டிக்கவும் செய்தார். முக்கியமாக தன்னை பற்றி நெகட்டிவ் இமேஜ் மக்களிடம் வந்துவிட்டதோ என்று பயந்த பார்வதி அழுதபோது திவாகர் மைசூர் பாக் சாப்பிட்டுக்கொண்டிருந்தது ரசிகர்களிடம் கடுமையான ட்ரோலை சந்தித்தது.
நீங்க ஏன் பேசுறீங்க: அதேபோல் சேதுவுடனான சந்திப்பை முடித்துவிட்டு சாப்பிடும்போது பார்வதி அதிகம் உணவு எடுத்துவிட்டார் என்று பிரச்னை வெடித்தது. அப்போதும் திவாகர்தான் அவருக்கு சப்போர்ட் செய்தார். உடனே ஒன்று சேர்ந்த ஹவுஸ்மேட்ஸ் பார்வதிக்கு ஒன்று என்றால் நீங்கள் ஏன் வருகிறீர்கள் என கேள்வி கேட்டார்கள். பிறகு அந்தப் பிரச்னை ஒருவழியாக ஓய்ந்தது.
கொஞ்சம் சாப்பிடு டா: இந்நிலையில் பார்வதியால் தங்களுக்கு உணவு குறைந்துவிட்டதாக வீட்டில் பேச்சு எழுந்தது. இதனால் விரக்தியான அவர் சாப்பிட்டாமல் வீட்டுக்கு வெளியே கார்டன் ஏரியாவில் அமர்ந்துவிட்டார். அதனைப் பார்த்து பதறிய வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், தட்டில் சாப்பாடு போட்டுக்கொண்டு பார்வதியிடம் வந்து கொஞ்சம் சாப்பிடு டா என சொல்ல; இல்லை அண்ணா எனக்கு வேண்டாம் என பார்வதி கூற, மீண்டும் மீண்டும் அவரை சாப்பிட வைக்க திவாகர் ட்ரை செய்தபடி இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்களோ அடேங்கப்பா தங்கச்சி மீது என்ன பாசம் என்று இதையும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











