ஆமா நான் கருப்பு பணம் வாங்கிருக்கேன்.. என்ன ரஜினி ஓபனா சொல்லி சம்பவம் செஞ்சிருக்காரு?.. செம போல்ட்
சென்னை: ரஜினிகாந்த் கடைசியாக கூலி படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கியிருந்தார். படமானது மோசமான தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார் ரஜினி. இந்நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் பெரிதாகவே ஈர்த்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். தனது ஆரம்ப காலத்தில் கமலஹாசனுடன் இணைந்து தொடர்ந்து நடித்து; பிறகு தனக்கென தனி பாதையில் பயணிக்க ஆரம்பித்தார். அந்தப் பாதையில் அவருக்கு ஏகப்பட்ட கஷ்டங்களும் வந்தன. இருப்பினும் அதையெல்லாம் அசால்ட்டாக கடந்த அவர் சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் கடந்த பல வருடங்களாக அமர்ந்திருக்கிறார்.
கூலி பிளாப்: ரஜினிக்கு வயது 70க்கும் மேல் ஆகிறது. இந்த வயதிலும் அவர் ஓயாமல் உழைப்பதை பார்த்து அனைவருமே ஆச்சரியப்படுகின்றனர். கடைசியாக அவர் இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தை ரொம்பவே அவர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் சுத்தமாக பூர்த்தி செய்யவில்லை.

ஜெயிலர் 2: கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். அவர் இப்படத்தின் ஷூட்டிங் கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. ரஜினிகாந்த் ரொம்பவே ஆர்வத்துடன் இப்படப்படிப்பில் கலந்துகொண்டார். இப்போது பிரேக் கிடைத்திருப்பதால் இமயமலைக்கு சென்றிருக்கிறார் அவர்.
ரஜினி அதிரடிதான்: ரஜினியை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை யாருக்கும் அச்சப்படாமல் பேசிவிடும் பழக்கத்தை கொண்டிருந்தவர். அதன் காரணமாக அவர் பல பிரச்னைகளையும், விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறார். இருந்தாலும் அவர் தன்னுடைய அந்த குணத்தை பல வருடங்கள் விடவே இல்லை. அவருக்கு அதன் காரணமாக ஜெயலலிதாவுடன் எல்லாம் கடுமையான மோதல் நிலவியது கடந்த கால வரலாறு.
ட்ரெண்டாகும் பேட்டி: குறிப்பாக, 'ஜெயலலிதா தமிழ்நாட்டின் ஆட்சிக் கட்டிலில் ஏறினால் இனி தமிழ்நாட்டை இறைவனால்கூட காப்பாற்ற முடியாது' என பேசியது; 'தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது' என ஜெயலலிதா ஆட்சியில் ஓப்பனாக கூறியது என ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் ஒரு பனிப்போரே நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில் ரஜினிகாந்த் கருப்பு பணம் வாங்குகிறார் என ஜெ சொன்னதற்கு ரஜினி பதிலடி கொடுத்த வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
கருப்பு பணம் வாங்கினேன்: 1996ல் பேசியிருந்த ரஜினி, "நான் கருப்பு பணம் வாங்கினேன் என்று ஜெயலலிதா சொல்கிறார். இல்லை நான் வாங்கவில்லை என்று சொன்னால் அது சுத்த பொய். ஆம் நான் கருப்பு பணம் வாங்கினேன்தான். 95 சதவீதம்வரை வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதைக்கு அவ்வளவுதான் புத்தி இருந்தது. பிறகு படிப்படியாக கருப்பு பணத்தை வாங்குவதை குறைத்துவிட்டேன். என் மேல் எந்த கேஸும் இல்லை. இப்போதுகூட அதிக வரி செலுத்தும் நடிகர்களில் நான்தான் முதலிடம். இவ்வளவு நடந்த பிறகும் மாறாத ஜெயலலிதா இனி எப்போதும் மாறமாட்டார்" என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படி ஓபனா பேசிருக்காரே என்று கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











