Thaththuvamasi 3: நிலா அது வானத்து மேலே.. இளையராஜா எழுதிய ஐட்டம் பாடல்.. அடடே இத்தனை தத்துவங்களா?
சென்னை: தமிழ் சினிமாக்களில் இடம் பெற்று வரும் பாடல்களில் துள்ளலிசை பாடல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் ஐட்டம் பாடல்கள் என்று வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பாடல்களுக்கு சொல்லவே வேண்டாம். இன்றைய ரீல்ஸ்களில் அந்த வகைப் பாடல்கள் டக்கென டிரெண்டாகி வரும். அதே நேரத்தில் இணையத்தின் அதிரிபுதிரியான வளர்ச்சிக்கு முன் வெளியான பல ஐட்டம் பாடல்கள் இன்றைக்கும் பிரஷ்ஷாக உள்ளது. ஐட்டம் பாடல்களின் வரிகளில் இடம்பெற்ற வாழ்க்கைத் தத்துவங்களை தத்துவமஸி என்ற தொடராக நாம் பார்த்து வருகிறோம்.
அந்தவகையில் இந்த தொகுப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கி, கமல்ஹாசன் நடித்து இசைஞானி இளையராஜா இசையில் வெளியான நாயகன் படத்தில் இடம் பெற்ற நிலா அது வானத்து மேலே பாடலில் இடம்பெற்றுள்ள தத்துவ வரிகளைக் காணலாம். இந்த பாடலின் பல்லவியிலேயே தத்துவத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார் ராஜா. அதாவது, பொழுதான போதும் துணை ஒன்னு வேணும் எனும் வரிகள் எனும் வரிகள் என்பது, ஐட்டம் பாடலில் இடம் பெற்றுள்ளதால் பலரும் அதை பாலினத் தேவையின் சொற்களாக கருதலாம். ஆனால் அந்த வரிகள் தனிமையில் உருகிக் கொண்டு இருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை பிரபதிலிக்கும் வார்த்தைகள். அதாவது ஆறுதல் சொல்ல, உளறுவதை கேட்க, ஒன்றாக இணைந்து வாழ ஒரு துணை வேண்டும் என்பதுதான் அந்த வரி.

நரிபுத்தி: பல்லவியிலேயே தத்துவத்தை இறக்கிவிட்டவர் சரணத்தில் மட்டும் விட்டுவைப்பாரா பாடலை எழுதி, பாடி இசையமைத்த இசைஞானி இளையராஜா?. அதாவது சரணத்தில், " ஓடுர நரியில.. ஒரு நரி கிழ நரி தான்.. இங்கு ஆடுற நரியில.. பல நரி குள்ள நரிதான்" என்று இடம் பெற்றுள்ள வரிகள் ஒட்டுமொத்த மனிதர்களையும் அடக்கி விடுகிறது. நரி என்று அவர் குறிப்பிடுவது மனிதர்கள் என்று வைத்துக் கொள்வோம். நரிகளிலேயே தந்திரமானது குள்ளநரி தான். அப்படிப் பார்த்தால் மனிதர்கள் இங்கு ரொம்பவும் தந்திரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார். இன்றைக்கும் சிலரைக் குறிப்பிடும்போது அவரா அவர் சரியான நரி என்று கூறுவார்கள். அது அவர்களின் தந்திரத்தை விளக்கும் சொல்.
பொன்னும் பொண்ணும்: இதற்கு அடுத்து அமைந்துள்ள சரணம் தான் மிகவும் முக்கியமான வாழ்க்கைத் தத்துவத்தை கூறுகிறது. அதுவும் குறிப்பாக ஆண்களுக்கு திருந்துங்கடா என்று கூறுவது போல அறிவுரையைத் தாங்கி வருகிறது. அதாவது, " பொன்னுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான் மண்ணுக்குப் போகிற உலகத்திலே, பசிக்குது பசிக்குது தினம் தினம்தான் தின்னா பசியது தீர்ந்திடுதா, அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு மனிதர்களுக்கு இடையில் குறிப்பாக ஆண்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்னை என்பது பெண்கள் மற்றும் பணம் ஆகிய இரண்டுக்கும் இடையில் நடக்கும் பிரச்னையாகத்தான் அதிகம் உள்ளது. இதற்கு வரலாற்றில் பல கதைகள் உள்ளது. குறிப்பாக ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் என போன்றவற்றைக் கூறலாம். அதேபோல் பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது என்பதையும் இந்த பாடல் வரிகள் கூறுகிறது.
உடையில் வறுமை வேண்டாம்: பாடலின் நான்காவது சரணத்தில் இடம் பெற்றுள்ள வரிகள் மிகவும் முக்கியமானவையாக குறிப்பிடலாம். அதாவது, " காட்டுல மேட்டுல உழைச்சவன் நான் ஆடிட பாடிட வேண்டாமா, வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான் உன் உடையில வறுமையும் வேண்டாமா, அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி" என்று எழுதியுள்ளார் பாடலாசிரியர் இளையராஜா. இது ஐட்டம் பாடல் என்பதால் பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை புடவை மட்டும் கட்டிக் கொண்டு, பிளவுஸ் அணியாமல் நடனம் ஆடுவார்.

தத்துவப்பாடல்: இதுபோல ஆடை அணிந்து கொண்டு நடனமாட வேண்டாம் என்றும், தான் இதற்கு முன்னர் வறுமையின் உச்சத்தை பார்த்தவன், எனவே என்னை போன்றவர்கள் வறுமையின் கொடுமையை மறக்க எப்போதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருக்க வேண்டும். வறுமையின் உச்சத்தில் இருந்த நானே ஆடைகளை எப்போதும் மிடுக்காக அணிந்து கொண்டு இருந்தேன். எனவே நீ ஆடைகளில் வறுமையைக் காட்ட வேண்டாம்" என்று எழுதி உள்ளார். இந்த பாடலை ஐட்டம் பாடல் என்று கூறுவதைக் காட்டிலும் ஒரு தத்துவப்பாடல் என்று கூறுவதே சாலச் சிறந்ததாக இருக்கும். அந்த அளவுக்கு தத்துவங்களை சரணத்திற்கு சரணம் சொல்லி உள்ளார் பாடலாசிரியர் இசைஞானி இளையராஜா.


Click it and Unblock the Notifications











