Thathuvamasi 9: தல தீபாவளி பாட்டில் இத்தனை தத்துவங்களா.. புரிஞ்சு நடந்துக்கிட்டா பொழைச்சுக்கலாம் போலயே!
சென்னை: தமிழ் சினிமாவில் இடம் பெறும் குத்துப் பாடல்கள், கிளாமர் பாடல்கள், ஐட்டம் பாடல்கள் என்று வகைப்படுத்தப்படுகிற, துள்ளலிசை பாடல்கள் என பலவற்றிலும் தத்துவங்களை வாரி வழங்கி உள்ளார்கள் தமிழ் சினிமா பாடலாசியர்கள். இதில் இம்முறை இயக்குநர் சரண் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து உருவான படமான அட்டகாசம் படத்தில் இடம்பெற்ற பாடலான, " தெற்கு சீமையில" பட பாடலில் பாடலாசிரியர் வைரமுத்து வாழ்க்கைத் தத்துவங்களை இறக்கியுள்ளார். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள தத்துவங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பாடலின் முதல் சரணத்தில் இருந்தே தத்துவங்களை களமிறக்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து. அதாவது,
" ஒரு காலத்தில தெரு ஓரத்தில...
தாயே என்ன தள்ளி வச்சா...
இந்த ஜென்மத்தில என்ன பாக்காதேன்னு...
கண்ணில் ஊசி வச்சு தச்சா..
ஒத்தையில விட்ட செடி என்னாச்சு...
அது எந்திருச்சு பனமரமாய் நின்னாச்சு...
ஒத்தமரம் ஒத்தமரம் கோப்பாச்சு...
அது முட்டு முன்னு வானம் மேலே போயாச்சு..." என்று உள்ள பாடல் வரிகள், படத்தின் கதையோட்டத்தில் தொடர்புடைய வரிகளாக இருந்தாலும், இந்த வரிகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வரிகளாகத்தான் உள்ளது.

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும்: அதாவது, இந்த உலகில் உங்களை வேண்டாம் என்று பெற்றோர்கள் சொல்ல மாட்டார்கள். அப்படியான நிலை ஏற்பட்டால் கூட, உயரமான மரம் எப்படி வளர்கிறதோ, அதேபோல் வளர வேண்டும். அதாவது கஷ்டப்பட்டு மழையாலும், வெயிலாலும், காற்றாலும் பாதிப்புகளை எதிர்கொண்டு, எந்த பராமரிப்பும் இல்லாமல் உறுதியாக வளரக்கூடிய மரத்தைப் போல, வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்களை எதிர் கொண்டாலும், சவால்களை சந்திக்க நேர்ந்தாலும் நமக்கு ஆறுதலாகவோ, உறுதுணையாகவோ யாரும் இல்லை என்றாலும் உறுதியாக வளரவேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதேபோல் இரண்டாவது சரணத்தில் இடம் பெற்றுள்ள வரிகளும் நம்பிக்கை அளிக்கும் வரிகளாகத்தான் அமைத்துள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து.
அதாவது, " ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா...
ஊரே தோளில் ஏறி நிற்கும்...
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா...
ஊரே தொழில் ஏத்தி வைக்கும்...
வெட்டவரும் எதிரிய எருவாக்கு...
நீ நட்டு வச்ச பூச்செடிக்கு உரமாக்கு...
உனக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கு...
நீ உழைப்பதை ஊருக்கு விருந்தாக்கு..." என்று இடம் பெற்றுள்ள வரிகள் முதல் சரணத்தை போலவே மிகவும் நம்பிக்கை அளிக்கும் வரிகள் இவை.

வாழ்வின் எதார்த்தம்: இந்த வரிகள் வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே காட்டுகிறது. அதாவது, " இந்த பொல்லாத உலகத்தில் நல்லவனாக வாழ்ந்தால் இந்த உலகம் நமக்கு துணையாக நிற்காமல் அது நம்மை உதாசினப்படுத்தும். அதேபோல், நாம் நெழிவு சுழிவு தெரிந்து வல்லவனாக வாழ்ந்தால், இந்த உலகம் நம்மை வல்லவன் என்று சொல்லும் என்கிறார். உன்னை எதிர்க்கும் எதிரிகளை நமது வாழ்க்கையில் முன்னேற பயன்படும் ஏணிகளாக மாற்றிவிட வேண்டும். மேலும் வாழ்க்கையில் நமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்க வேண்டும், அது உறவினர்களாக இருக்கலாம், அல்லது நட்பு வட்டமாக இருக்கலாம். அதேபோல் உழைப்பால் வரும் பணத்தை தனக்கு போக ஊருக்காக செலவு செய்து, பிறருக்கு பயனுள்ள வாழ்க்கையை வாழவேண்டும்" என்று கூறுகிறார் பாடலாசிரியர் வைரமுத்து. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் பரத்வாஜின் இசை ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு துள்ளல் இசையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











