Thathuvamasi 7: குத்து பாட்டில் பேரரசு இறக்கிய தத்துவங்கள்.. அடடே மதுப்பிரியர்களுக்கு ”செக்” வெச்சுட்டாரே!
சென்னை: தமிழ் சினிமாவில் இடம் பெறும் குத்துப் பாடல்கள், கிளாமர் பாடல்கள், ஐட்டம் பாடல்கள் என்று வகைப்படுத்தப்படுகிற, துள்ளலிசை பாடல்கள் என பலவற்றிலும் தத்துவங்களை வாரி வழங்கி உள்ளார்கள் தமிழ் சினிமா பாடலாசியர்கள். இதில் இம்முறை நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த படமானா, 'பாண்டி' படத்தில் இடம் பெற்ற "குத்துமதிப்பா" என்ற பாடலில் இடம் பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவங்களைக் காணலாம்.
பாடலின் முதல் சரணத்தில் இடம் பெற்றுள்ள வரிகளிலேயே பாடலாசிரியர் பேரரசு வாழ்க்கைத் தத்துவங்களை சொல்லி உள்ளார். அதாவது, " உனக்கொரு ரவுண்டு எனக்கொரு ரவுண்டு... வாழ்க்கையில் இருக்குதடா" இந்த வரிகள் நமக்கு தோல்வியோ, வாழ்க்கையில் சரிவோ வரும்போது நாம் துவண்டு விடக்கூடாது என்பதற்கான உத்வேக வரிகள். அதாவது வாழ்க்கையில் நமக்கு எதிரில் இருப்பவருக்கு வசந்த காலம் என்று ஒன்று இருக்கிறது என்றால், நமது வாழ்க்கையிலும் வசந்த காலம் என்ற ஒன்று வரும் என்று நம்பிக்கை அளிக்கிறது.

அதேபோல், அந்த வரிகளைத் தொடர்ந்து வரும் வரிகளான, " மீன் காஞ்சா கருவாடு... நீ காஞ்சா திருவோடு" என்ற வரிகள் மிகவும் முக்கியமான வரிகள். நாம் நம் வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாமல் துவண்டு போய் விடக் கூடாது. அப்படித் துவண்டு போனால், நாம் இருக்கும் நிலையில் இருந்து கீழ் நிலைக்குத்தான செல்ல முடியுமே தவிர, முன்னேற முடியாது என்பதை உணர்த்துகிறது. மேலும், "ஏத்துங்கடா அளவோடு... இல்லைன்ன சுடுகாடு" என்ற வரிகள் மதுப்பிரியர்களுக்கு தலையில் குட்டு வைக்கும் வரிகள். அதாவது நிலை தடுமாறும் அளவுக்கு மது அருந்தினால் வாழ்க்கையை இழந்து இறக்க நேரிடும் என்று அறிவுரை சொல்கிறார் பாடலாசிரியர் பேரரசு.
குடி குடியை கெடுக்கும்: இரண்டாவது சரணத்திலும் மதுப்பிரியர்களுக்கே பாடம் நடத்துகிறார். அதாவது, " குடிக்கிற குடி தான் குடியை கெடுக்கும்... வித்தவன் பேச்சை மத்தவன் கேட்டா... அவன் குடி கெட்டுடும்டா பாட்டிலில் இருக்குதடா". இந்த வரிகளில் குடிக்கிற குடிதான் குடும்பத்தையும் வாழ்க்கையும் கெடுக்கும். இது மது பாட்டிலில் எழுதித் தான் விற்கப்படுகிறது. பாட்டிலில் எழுதி இருப்பது போல அனைவரும் மதுவைக் கைவிட்டு விட்டால், அதை விற்பனை செய்பவர்களின் வாழ்க்கையும் குடும்ப நலனும் கெட்டுவிடும் என்கிறார்.

போதை: இரண்டாவது சரணத்தில் தொடர்ந்து வரும் வரிகளில், " ஆணுக்கு பெண் போதை... பெண்ணுக்கு ஆண் போதை" எனவும், " பணம் தாண்டா பெரும் போதை... போதை இல்லா வாழ்க்கை இல்ல" என்று எழுதி உள்ளார். இந்த வரிகள் மிகவும் சிறப்பான தத்துவத்தை தாங்கி வரும் வரிகள் என்று கூறலாம். அதாவது, இந்த உலகத்தில் ஆண்களுக்கு பெண்கள் மீது போதை, பெண்களுக்கு ஆண்கள் மீது போதை என்று குறிப்பிடுவதில் அவர் மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக இருக்க வேண்டிய காதலைத்தான் கூறுகிறார் என்று நாம் பொருள் படுத்திக் கொள்ளலாம். அதேபோல், அனைவருக்கும் பணம் தான் பெரும் போதை என்று குறிப்பிடுவது 100க்கு 100 சரி என்றுதான் பலரும் சொல்வார்கள். உலகத்திலேயே பணத்தாசை இல்லாத மனிதர்கள் வெகு சொற்பமாகத்தான் இருக்கிறார்கள். மக்கள் பண போதையில் இருந்து வெளியே வரவேண்டும் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications











