நெஞ்சுக்கு நீதி... தாத்தாவின் டைட்டிலை கைப்பற்றிய பேரன் உதயநிதி ஸ்டாலின்
சென்னை : தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். கொரோனா மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக சிறு பிரேக்கிற்கு பிறகு மீண்டும் சினிமாவிற்கு திரும்பி உள்ளார் உதயநிதி.
வரிசையாக பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். டைரக்டர் மகிழ் திருமேனி இயக்கும் கண்ணை நம்பாதே, மாரி செல்வராஜ் இயக்கும் ஏஞ்சல் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் உதயநிதி. அதற்கு முன் டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் உதயநிதி.

போனி தயாரிப்பில் உதயநிதி
இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர், படத்தின் டைட்டிலுடன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இது பாலிவுட்டில் வெளியான த்ரில்லர் படமான ஆர்டிக்கிள் 15 படத்தில் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தை போனி கபூரின் பேவ்யூ ப்ரோஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளது.

நெஞ்சுக்கு நீதி
அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என வலுவான டை்டடில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உதயநிதி முதல் முறையாக போலீஸ் ரோலில் நடிக்கிறார். இந்த க்ரைம், த்ரில்லர் படத்தில் போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கும் உதயநிதியின் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெஞ்சுக்கு நீதி - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற டைட்டில் அரசியல் ரீதியாகவும் உதயநிதிக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.

தாத்தா பட டைட்டில்
1979 ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படம் ரிலீசானது. இந்த படத்திற்கு முன்னாள் முதல்வரும், திமுக தலைவரும், உதயநிதியின் தாத்தாவுமான கலைஞர் கருணாநிதி தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருந்தார். இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு, வசனங்கள் அரசியல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்தது.

சுயசரிதை டைட்டில்
அதே போல் கருணாநிதி தனது வாழ்க்கையை சுயசரிதை புத்தகமாக எழுதினார். இந்த புத்தகத்திற்கும் நெஞ்சுக்கு நீதி என்று தான் கருணாநிதி பெயரிட்டிருந்தார். இந்த புத்தகம் ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டது. தாத்தாவின் அரசியல் ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்ட பெயரையே தனது படத்திற்கு தற்போது டைட்டிலாக பெற்றுள்ளார் உதயநிதி.
Recommended Video

இது தான் படத்தின் கதை
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கிய படம் ஆர்ட்டிக்கிள் 15. இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள 15 வது சட்டப்பிரிவை பற்றியது. மதம், ஜாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியற்றிற்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் சட்டப்பிரிவு இது. இந்த சட்டப்பிரிவை அடிப்படையாக கொண்டு நடந்த பல உண்மை சம்பவங்களை பற்றியது தான் ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் கதை. நம்மை சுற்றி நடக்கும் சமூக அநீதிகளை நேரடியாகவும், வெளிப்படையாகவும் விமர்சித்து, பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படம் இது.

பாடலாசிரியராகும் அருண்ராஜா
இந்த படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் தயாராக உள்ளது. இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க உள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை ரூபன் கவனிக்க உள்ளார். இந்த படத்திற்கு டைரக்டர் அருண்ராஜா காமராஜே பாடல் எழுத உள்ளார். அதோடு ஒரு பாடலையும் தனது சொந்த குரலில் அவர் பாட உள்ளார்.


Click it and Unblock the Notifications











