எப்ஐஆரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் மஞ்சிமா, ரைசா, ரெபா
சென்னை: நடிகர் விஷ்ணு விசால் இஸ்லாமிய இளைஞனாக நடிக்கும் பைசல் இப்ராஹிம் ரய்ஸ் படத்தில் இவருடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஜோடியாக நடிக்கப் போவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் தயாராகும் எஃப்ஐஆர் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர்.

அடங்கமறு என்ற வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 ஆண்டுளுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பாக எஃப்ஐஆர் மூலம் திரைப்பட தயாரிப்பில் தடம் பதிக்கிறார்.
நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், உள்ளிட்ட பல படங்களில், சுமார் ஏழு வருடங்கள் தலைமை இணை இயக்குனர், நிர்வாக தயாரிப்பாளர் என பல பொறுப்புகளில் முன்னணி இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனிடம் பணியாற்றிய மனு ஆனந்த், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, நீர்பறவை, முண்டாசுபட்டி மற்றும் சமீபத்தில் வெளியான ராட்சசன் உள்ளிட்ட பன்முகப்பட்ட கதைகளத்தை உடைய பல திரைப்படங்களின் மூலமும் தனது அழுத்தமான நடிப்பின் மூலமும், மக்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த விஷ்ணு விஷால், முற்றிலும் புதிய கோணத்தில் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் முக்கியமான சுவராஸ்யமான வேடங்களில், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கின்றனர்.

சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூறமுடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப்போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதை உணர்வுபூர்வமான காட்சி அமைப்புகளுடன் இந்த அதிரடி திகில் படம், இன்றைய காலச்சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், அனைத்து ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் உருவாகிறது.
இப்படத்தின் முக்கிய வேடங்களில் இமான், பிரவீன் குமார், மாலா பார்வதி, ஆர்என்ஆர் மனோகர், ஷப்பீர், கவுரவ் நாராயணன், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ராகேஷ் பிரம்மானந்தன், பிரவீன்.கே.நாயர், பிரஷாந்த், வினோத் கைலாஷ், ஷ்யாம் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான முக்கியத்துவம் பெறுவதால், ஒவ்வொரு நடிகரும் இதுவரை தாங்கள் நடித்திராத வித்தியாசமான, புதிய கேரக்டர்களில் வலம் வந்து மக்கள் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று இயக்குநர் கூறியுள்ளார்.

பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவரும், கிருமி படப் புகழ் ஒளிப்பதிவாளருமான அருள் வின்சென்ட் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். குறும்படங்கள், இணைய தொடர்கள், திரைப்படங்கள் என அனைத்து தளங்களிலும் இயங்குகின்ற இசையமைப்பாளர் அஷ்வத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு பொறுப்புகளை ஏற்க, இந்துலால் கவீத் கலை இயக்கத்தை கவனித்து கொள்கிறார். ஆடை வடிவமைப்பு பூர்த்தி பிரவீன் வசமும், சண்டை பயிற்சி ஸ்டண்ட் சில்வா வசமும் மக்கள் தொடர்பு நிகில் முருகன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் வரவிருக்கும் இப்படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்த மாதத்தில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











