'குப்பாயி' ஸ்னேகா!
நைனா, கய்தே, கஸ்மாலம் என பேச ஆரம்பித்துள்ளார் ஸ்னேகா. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை, குப்பத்து பெண் வேடத்தில் நடிப்பதற்காகத்தான் இந்த பிராக்டிஸில் ஈடுபட்டுள்ளாராம் ஸ்னேகா.
புதுப்பேட்டைப் படத்துக்குப் பிறகு வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளார் ஸ்னேகா. விதம் விதமான கேரக்டர்களுடன் வரும் இயக்குநர்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுக்கிறாராம்.
அப்படி அவர் நடித்த வேடம்தான் பள்ளிக்கூடம் படத்தில் வந்த கோகிலா டீச்சர் கேரக்டர். அந்தக் கேரக்டரில் தனது நடிப்புக்கு பலரும் பாராட்டவே சந்தோஷமாக இருக்கிறார் ஸ்னேகா.
இந்த நிலையில் ஸ்னேகாவைத் தேடி சூப்பரான ஒரு ரோல் வந்துள்ளது. இந்த கேரக்டரைக் கேட்டவுடனேயே ஜாலியாகிப் போன ஸ்னேகா உடனடியாக கால்ஷீட் கொடுத்து விட்டாராம்.
இந்தப் படத்தை இயக்கப் போவது மதுரவன். படத்தில் ஸ்னேகாவுக்கு சென்னை குப்பத்துப் பெண் வேடமாம். இப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் நடித்துத் தூள் கிளப்ப வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆர்வமாக இருந்தாராம் ஸ்னேகா. அந்த ரோலே தன்னைத் தேடி வந்ததால் ஜாலியாகி விட்டதாம்.
நடிக்க ஓ.கே. சொல்லிய கையோடு, குப்பத்துப் பெண்களின் மேனரிசம், பேச்சு வழக்கம், நடை, உடை, பாவனை உள்பட அனைத்து சமாச்சாரங்களையும் ஊர்ந்து கவனிக்க ஆரம்பித்துள்ளாராம்.
அத்தோடு நில்லாமல் தனது வீட்டுக்குள், மாமே, கய்தே, கஸ்மாலம், இன்னாடா, பிகிலு என சென்னை பாஷையைப் பேசி டிரையல் பார்த்து வருகிறாராம்.
இதற்கு முன்பு சென்னை குப்பத்துப் பெண் கேரக்டர்களில் நடித்த நடிகைகளை விட நான் சூப்பராக நடித்துக் காட்டுகிறேன் என்று தெரிந்தவர், அறிந்தவர்களிடம் சவால் வேறு விட்டு வருகிறாராம்.
சொம்மா அசத்தும்மே!


Click it and Unblock the Notifications











